Thursday, September 10, 2009

கிரிவல விவாதம்...

கிரிவல விவாதம்...



தலைப்பை பார்த்த உடன் சிநேகா கிரிவல சர்ச்சையில் சிக்குன
விவாதம்னு தப்பா நினைச்சிக்காதிங்க இது வேற...

போன வாரம் நானும் நண்பர்கள் சித்து,நட்டு மற்றும் புறா
என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் சங்கரும்
திருவண்ணாமலை கிரிவலம் பௌர்ணமி இல்லாத நாளில்
சென்றோம்.அதிகாலை மூன்று மணிக்கு கிரிவலம் ஆரம்பித்தோம்,
சித்து அவர்கள் பர்ஸ்,கைப்பேசி அனைத்தையும் காரிலே வைத்து
விடும்படி கூறினார்.அப்போது நட்டு அவர்கள் "ஜூரம் வருவது
போல் உள்ளது நான் வரவில்லை நீங்கள் போங்க" என்றார்.
சங்கர் அவர்கள் நட்டுவை சமாதானம் பேசி வர வைத்தார்.

நான் எப்போதும் பௌர்ணமி நாள் அன்று போவேன், இப்போது
போவது மிகவும் வித்யாசமாக பட்டது.எங்கள் நால்வரை தவிர
ரோட்டில் வேறு யாரும் இல்லை.எனக்கு நெஞ்சின் ஓரத்தில் சிறு
பயம் ஒட்டி கொண்டது அதற்க்கு காரணம் தண்ணி வேறு இல்லை.
தண்ணி எப்படி காலி ஆச்சுன்னு சொல்ல விரும்பல....

எனக்கும் சரி சங்கர் மற்றும் நட்டுக்கும் சரி கடவுள் நம்பிக்கை
இல்லை என்றே சொல்ல வேண்டும்.சித்துவை பற்றி தெரியாது.
அப்புறம் ஏன் கிரிவலம் போறன்னு கேக்குறிங்களா?...
மனதை கட்டு படுத்த முடியுமா அல்லது ஒரு நிலை படுத்த முடியுமா என்று ஒரு சிறு முயற்சி அப்புறம் பல ரக மக்களை
சந்திக்கலாம்.நாங்கள் கிரிவலம் ஆரம்பத்தில் எடுத்த டாபிக் ரொம்ப
மட்டமானது,சில சமயம் நான் அவர்களிடம் "நாம கிரிவலம் போய்க்கிட்டு இருக்கோம்"என்பதை நினைவு படுத்த வேண்டி இருந்தது.

உபரி தகவல்: நட்டுவும்,சித்துவும் செருப்பு போட்டு தான் கிரிவலம்
சென்றார்கள்.... யாரவது வேணும்னா கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்துங்க.

வழியில் சித்தர்கள் சமாதி இருக்கும் இடத்தில் என்னை யாரோ
பக்தா என்று அழைப்பது போல் கேட்டது. நான் நட்டுவிடம் சொன்னேன் அவன் "டேய் என்னை வீணா டென்ஷன் பண்ணாத,
நீயெல்லாம் பக்தானடா" என்று நக்கல் அடித்தான். இருந்தாலும்
நான் அப்போ அப்போ பின்னாடி திரும்பி பார்த்து பார்த்து நடந்தேன்.

எட்டாவது கிலோமீட்டரில் ஒரு டீக்கடையில் டீ குடித்தோம், அங்கே
சங்கர் அவர்கள் குட்டி தூக்கம் போட்டார்.ரைட் இதுக்கு மேல டாபிக்
போட்ட தான் கோவில் போய் சேர முடியும் என்று டாபிக் ஆரம்பித்தது.
நான் சங்கரிடம் "நீ ப்ளாக் உறிப்பினர், ஏதாவது எழுதுறது" என்றேன்.
அப்புறம் டாபிக் எங்கயோ போய் விட்டது.
"கோவிலுக்கு முட்டை சாப்பிட்டு போறது தப்பு இல்ல,
எனக்கு தப்பா படல" என்றான் நட்டு.மேலும் "உங்களுக்கு தப்பா
படறது எனக்கு தப்பா படல, ஆனா உங்களையும்
நான் செய்ய சொல்ல மாட்டேன்" என்றார்.

மேலும் செக்ஸ் கல்வி, முறை தவறி நடக்கும் செக்ஸ் போன்றவற்றை நண்பர்கள் விவாதம் செய்தார்கள். நான் இந்த
விவாதத்தில் கலந்து
கொள்ளவில்லை காரணம் இந்த விவாதம் செய்ய அது
சரியான இடம் அல்ல என்பதே.
சங்கர் அவர்கள் "எனக்கு தப்பு செய்ய பிடிக்கும் ஆனா
செய்றது இல்ல அதுக்கு காரணம் நான் வளர்ந்த சமூகம் அப்படி" என்றார்.
நண்பர் சித்து அவர்கள் எதற்கெடுத்தாலும் "நான் இப்போ மடக்குரேன்
பாரு" என்று சங்கரை நோக்கி கேள்விகள் கேட்டு கொண்டு இருந்தார்,
அல்லது சங்கர் கூறும் அனைத்தையும் மறுத்தார் என்றே சொல்ல வேண்டும்.

கிரிவலம் முடித்து கோவிலுக்குள் போனால் செம கூட்டம்,
மூகர்த்த நாள் என்பதால் ஒரே கல்யாணம்தான்.அருணாச்ச்சலனை
பார்க்க இருபது ரூபாய் டிக்கெட் எடுத்து சென்றால் ரெண்டு
வினாடிகள் கூட பார்க்க விடவில்லை.சங்கர் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டார்," எதுக்கு ஒரு ஆளுக்கு இருபது ரூபாய் இதுக்கு தான் நான் திருப்பதி கூட போவதில்லை" என்றார்."அப்புறம் எப்படி எல்லாத்துக்கும்
சம்பளம் கொடுப்பாங்க" என்று சித்து கேட்டார்.
"அதெல்லாம் நிறைய காசு வரும்" என்றார் சங்கர்.
"டைம் ஆச்சு கிளம்புவோம்" என்று சென்னைக்கு திரும்பினோம்.
உங்கள்
ஜெட்லி சரண்

3 comments:

லோகு said...

அண்ணாமலையார் கிட்ட என்ன வேண்டிகிட்டீங்க..

சித்து said...

நல்ல பதிவு மச்சி!!!!!!!!!!

எனக்கு இந்த பதிவில் சில சந்தேகங்கள் தோன்றியது அதற்கு தான் இந்த பின்னூட்டம்.

மச்சி நீ சொல்ற என்னைப் பற்றி தெரியாது ஆனா உங்க மூணு பேருக்கும் கடவுள் பக்தி கிடையாதென்று, கிரிவலம் வந்ததுக்கு காரணம் "மனதை கட்டு படுத்த முடியுமா அல்லது ஒரு நிலை படுத்த முடியுமா என்று ஒரு சிறு முயற்சி அப்புறம் பல ரக மக்களை சந்திக்கலாம்". மனதை நீ எந்த வகையில் கட்டுப்படுதினாய்?? எந்த வகையில் ஒரு நிலை படுத்தினாய்?? ஒன்னும் விளங்கவில்லை, எப்பொழுதும்போல் தான் இருந்தாய். கடைசி ஆறு கிலோமீட்டர் தூரம் மட்டும் எதுவும் பேசாமல் மெளனமாக நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை சிரித்தவாறே கேட்டுவந்தாய்.

அதாவது இப்பொழுது ஒரு பேஷன் என்னவென்றால் எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்று கூறுவது, பிரபலங்கள் பலரும் இப்படி தான் பேசறாங்க. நம்ம உலக நாயகன் ஒரு படி மேல் போய் "எனக்கு கல்யாணம் மேல் நம்பிக்கை இல்லை, ஏனென்றால் அது தோல்வியில் தான் முடிகிறது" என்று கூறுகிறார். நாம் அவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம் ஆனால் இந்த கேள்விக்கு அவர் பதில் சொல்லட்டும் "நீங்கள் எடுக்கும் எவ்வளவோ படங்கள் தோல்வி அடைகிறது, அதனால் பல தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வருகிறார்கள். அதனால் படத்தில் நடிப்பதை விட்டுடுவீங்களா??".

சரி நம்ம விஷயத்துக்கு வருவோம் உங்களுக்கு நம்பிக்கை இருப்பதும் இல்லாததும் உங்கள் இஷ்டம் ஆனால் நம்பிக்கை இருப்பவர்களை ஏதோ மதவெறியர்களை போல் பார்க்கவேண்டியதில்லை, உனக்கு நன்றாக தெரியும் எனக்கு இறை நம்பிக்கை இருக்கிறதென்று பின் எதற்கு நீ அதை தெரியாது என்று மறைக்கிறாய்?? இதில் மறைக்க என்ன இருக்கிறது?? நான் தெளிவாக இருக்கிறேன், எந்த போர்வைக்குள்ளும் சென்று ஒளிந்துகொள்ளவில்லை. எனக்கு என் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு, அதற்காக எப்பொழுதும் பட்டையும் கொட்டையுமாக திரிவதில்லை அதேபோல் அடுத்தவர் நம்பிக்கையிலும் குறுக்கிடுவதில்லை. கொடைக்கானல் சென்றால் கண்டிப்பாக அந்த பழம்பெரும் சர்ச் செல்வது வழக்கம், அடையார் சிக்னல் சிஸ்டர் அல்போன்சோ கோவில் செல்லும்பொழுது வழிபடுவேன். அதேபோல் நான் காவேரிப்பட்டினம் செல்லும்பொழுது இரு மசூதிகளில் வழிபடுவேன், இதெல்லாம் நான் யாரிடமும் சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை ஆனால் நீ என் நண்பன் அதனால் தான் உனக்கு இதெல்லாம் சொல்கிறேன்.

அடுத்தது நண்பர் சங்கர் கூறிய கருத்துக்கு நான் மறுப்பு தெரிவித்ததை பற்றி கூறுகிறாய், உன்னால் அந்த கருத்துக்கள் அனைத்தையும் ஒத்துக்க முடியுதா?? அந்த கருத்துக்களை நீ இங்க எழுத முடியுமா?? வித்தியாசமாக சிந்தித்தாலும் அதில் உனக்கு ஒரு பெருமை சேருமா இந்த யோசனைகளை வைத்து?? நான் ஒரு வித்தியாச யோசனை சொல்கிறேன் சங்கருக்கு, நீ புத்தகம் படிக்கும் நேரத்தில் அரை மணி நேரத்தை குறைத்து தினமும் உங்கள் பகுதியில் ஒரு மறக்கன்றை நடு தினமும் ஒரு மாதத்திற்கு ஒரு செடியை நடு, அல்லது ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று உன்னால் இயன்ற உதவிகளை செய். அவ்வாறு செய்தாயானால் கண்டிப்பாக நீ இந்த உலகிற்கும் சமூகத்திற்கும் ஏதோ பலன் சேர்க்கிறாய். இவ்வாறு செய்ய ஏதேனும் உதவி வேண்டுமானால் என்னால் முடிந்ததை கண்டிப்பாக நானும் செய்கிறேன்.

அருணாச்சலரை இரு வினாடிகள் கூட பார்க்கவிடவில்லை என்று வருந்துகிறாய்!!! எதற்கு?? உனக்கு தான் கடவுள் நம்பிக்கை கிடையாதே பின் எதற்கு வருத்தம்?? விட்டால் என்ன விடாவிட்டால் என்ன?? உன்னை யாரும் இருபது ருபாய் கொடுத்து சாமியை பார்க்க சொல்லவில்லை உனக்கு வேண்டுமானால் நீ கொடு, இல்லையேல் சாதாரண தரிசனத்தில் வந்து பாரு. இது மொத்தமும் உன் விருப்பம் தான், இதில் யாரையும் குறை கூற இயலாது. ஒவ்வொரு நாளும் லட்சோபலட்சம் பக்தர்கள் வரும்பொழுது வேகமாக உன்னை போகத்தான் சொல்வார்கள் அப்பொழுது தான் அனைவரும் சாமியை கண்டு தரிசிக்க முடியும் இதில் கோபப்படவும் குறை கூறவும் ஒன்றும் இல்லை.

இதில் ஏதேனும் உன் மனது புண்பட்டிருந்தால் என்னை மன்னித்திடு. நன்றி.

ஜெட்லி... said...

@ chithu

உனது கருத்துக்கள் வரவேற்க்கபடுகிறது, இதில் நான் புண்ப்பட எதுவுமில்லை.

நான் மனதை கட்டுப்படுத்த முயன்றது உனக்கு தெரிய வேண்டிய
அவசியம் ஏதும் இல்லை என்று நினைக்கிறேன். தாங்கள்
நன்றாகவே சாமி மந்திரத்தை சொல்லி கிரிவலத்தை சூற்றி
வந்ததை நான் அறிவேன்.எல்லா கோவிலுக்கும் நாங்களும்
போவோம்,கோவில் எப்படி கட்டி இருக்காங்க அப்படின்னு
பாப்போம். ஆனால் கோவில் ஸ்தலத்தை சுற்றி இது வரை
அப்படி ஒரு டாபிக் போட்டு கிரிவலம் சென்றது இதுவே கடைசி
முறையாக இருக்க வேண்டுகிறேன்.

அப்புறம், கோவிலுக்குள் செல்ல இருபது ரூபாய் டிக்கெட்
எடுத்தது யார் என்று அவர்களுக்கே வெளிச்சம்?....
தாங்கள் இடுகையை சரியாக படிக்க வில்லை போலும்,
இரண்டு வினாடி பார்க்க விட்டார்கள் என்று நான் வருத்தப்பட்டதாக
கூறியுள்ளிர் சரியாக படிக்கவும்.நான் வருத்தபட வேண்டும்
எனில் இந்த இடுகையை போட்டதுகாக வருத்தபடுகிறேன்.
ஏன் என்றால் இந்த இடுகை உன்னை இவ்ளோ பெரிய
பின்னூட்டம் போட வச்சிரிச்சே என்று....

தாங்கள் கேட்ட பிற கேள்விகளுக்கு சம்பந்த பட்டவர் தான் பதில் சொல்ல வேண்டும்,சம்பந்த பட்டவர் ப்ளாக் ஓபன் பண்றாரா என்று எனக்கு தெரியாது....

நன்றிகள் பல....