வணக்கம், நான் சங்கர், நண்பர்கள் சரவணன் (ஜெட்லி) & சித்து குறிப்பிட்டு இருக்கும், ஒரேபுத்தகத்தை பலமுறை வாசிக்கும், அதே சங்கர் ( http://nee-kelen.blogspot.
- என் ரசனை மேல் எனக்கு இருக்கும் நம்பிக்கை, அதை பற்றி பேசுவதில் இல்லை
- எல்லாமே எப்போதோ சொல்லப்பட்டு விட்டது, புதிதாய் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்ற எண்ணம்
- நாம் சொல்வது அதே அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படுமா என்ற தயக்கம்
- பல இடங்களில், பல நேரங்களில் தோன்றும் எண்ண சிதறல்களை ஒன்றாய் கோர்ப்பதில் உள்ள சிரமம்
- எல்லாத்துக்கும் மேலே எனக்கு கேள்வி இல்லாம பதில் சொல்ல தெரியாது (அதாவது கேள்வியும் நானே பதிலும் நானே என்பது இயலாது)
முதலில், ஜே ஜே சில குறிப்புகளில் இருந்து சில வரிகள்,
வாசலை பார்த்தபோது, அந்த பிச்சைக்காரன் எப்போதோ போய்விட்டிருந்தான், ஜே ஜே அவசரமாக வெளியே வந்தான் அவன் போயிருக்க கூடியதாக அனுமானித்து ரயில்வே ஸ்டேஷன் சாலையில் ஓடினான் ஒரு திருப்பத்தில் உள்ளுணர்வு உந்த சர்ச் சாலையில் திரும்பினான், சற்று தூரத்தில் சாலை மரத்தடியில் தொழுநோயாளியை பார்த்தான், ஆனால் இவன் உடைகள் சற்று சுத்தமாக இருந்தன, இது என்ன அதற்குள் ஓர் அவசர சலவையா என யோசித்தான், இவன் வேறு பிச்சைக்காரன், ஆனால் யாராயிருந்தால் என்ன, உதவுவதாக எடுத்த முடிவில் மாற்றம் ஏதும் இல்லை, ஒரு முழு வெள்ளி நாணயத்தை எடுத்து அவன் முன் வீசினான், ஒருவேளை விரல்களே இல்லாமலிருந்தால் எப்படி பணத்தை எடுப்பான் என உரைக்க குனிந்து எடுக்க போனான் அப்போது அந்த பிச்சைகாரனின் இடது கால் நீண்டு பணத்தை மண்ணோடு தேய்த்தது,"
இந்த சம்பவத்தை ஜே ஜே பேராசிரியர் மேனனிடம் கூறும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாக இருந்தான், "அவன் தேய்த்து தள்ளியது பணத்தை அல்ல, அவனை சக மனிதனாக கணக்கில் எடுத்துக்கொள்ளாத என்னுடைய அலட்சியத்தை தான், பல புத்தகங்களும் பல நூறு தத்துவங்களும் கடந்து வந்த பின்னும் பழக்கத்தின் தடத்திலேயே மீண்டும் மீண்டும் மனம் சரிகிறது," என்றான்,"
மேலே உள்ள வரிகள் எழுதும் போது ஜே ஜே சில குறிப்புகள் என் கையில் இல்லை, கிட்டதட்ட ஆறு முறை தொடர்ந்து (அதாவது ஆரம்பத்திலிருந்து முடிவு வரை படித்து மீண்டும் முதல் பக்கத்தில் தொடங்கி படிப்பது) படித்து முடித்து நண்பன் நட்ராஜ்க்கு கொடுத்து இருக்கிறேன், வரிக்கு வரி அப்படியே எழுதாவிட்டாலும் தொண்ணூறு சதம் சுராவின் வார்த்தைகளையே பயன்படுத்தி எழுதி இருக்கிறேன். நான்காவது முறை வாசிக்கும் போது, புத்தகத்தின் இந்த பகுதி என் கவனத்தை ஈர்த்தது,
ரசனை பற்றி பேசும்போது ரசனைக்குரிய விஷயங்கள் பற்றியும் கூற வேண்டும், "ஒரு நல்ல படைப்பு என்பது ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பையோ அல்லது ஒரு பாறையின் கனத்தையோ மனதில் ஏற்படுத்த வேண்டும்" (எங்கேயோ படித்தது ). அப்படி ஓர் உணர்வை ஏதாவது ஒரு கணத்தில் உருவாக்கும் படைப்பே ரசிகன் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.
மேலே கூறியது ரசனை பற்றி பொதுவான கருத்து என்றாலும் பொதுவான ரசனை என்று ஒன்று இல்லை, அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் (மற்ற எந்த விஷயத்தையும் போலவே!). அது அவரவர் பிறந்து வளர்ந்த சூழலை சார்ந்தே உள்ளது.
எனக்கு மிக சிறந்ததாக தோன்றும் ஒரு நாவல், நண்பர் நட்ராஜ்க்கு அர்த்தமற்ற சொற்குப்பையாக இருக்கலாம். நண்பர் சரவணனுக்கு மொக்கை படமாக தோன்றும் மும்பை எக்ஸ்பிரஸ் (http://nee-kelen.blogspot.
என் செய்கைகளை பற்றி மற்ற யாருக்கும் பதில் சொல்வதை விடவும் எனக்கு நானே சொல்லிக்கொள்ள வேண்டியதை தான் முக்கியமானதாக கருதுகிறேன், என் ரசனை எனக்கு தந்திருக்கும் பெரும்பரிசு இந்த சுயவிமர்சன பார்வைதான். என் ரசனை வெறுமனே படித்து ரசித்து விடுவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மதிப்பீடு செய்யவும், தவறுகளை மீண்டும் நிகழாவண்ணம் பார்த்துகொள்ளவும் உதவுகிறது. ஒரு புத்தகத்தை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அந்த இடமும் சூழலும் ஒரு புதிய அர்த்தத்தை காட்டும். கவுண்டமணியின், வடிவேலுவின் நகைச்சுவை காட்சியையே ஒவ்வொரு முறையும் அதே உற்சாகத்துடன் நம்மால் ரசிக்க முடிகிறபோது இதுவும் சாத்தியமே.
சில வாரங்களுக்கு முன் விஜய் டிவி நீயா நானாவில் தமிழ்நாட்டில் புத்தக வாசிப்பு குறித்து விவாதம் நடந்தது, தமிழ் வாசிப்பும் ரசனையும் தேவை இல்லை என பேசிய இந்த தலைமுறை இங்கிலீஷ் மீடியம் இளைஞர்கள், (பெரும்பாலும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள், சங்கம் வளர்த்த செந்தமிழர்கள் சிலரும் கூட), பேசியதன் ஒரு வரி சுருக்கம், 'தமிழ் எங்கள் சோற்றுக்கு உதவுவதில்லை அதனால் எங்களுக்கு அது தேவையில்லை', இதை கூட ஒரு வகையில் ஏற்று கொள்ளலாம், ஆனால் தமிழ் வேண்டும் என பேசியவர்களோ 'தமிழ் எங்கள் பேச்சு, தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் உயிர், தமிழ் எங்கள் ம... ' என்ற ரீதியிலே பேசினர், சிறப்பு விருந்தினராக வந்த பேச்சாளர் (பாரதி பாஸ்கர் என நினைக்கிறேன்) கூறிய, வேறு ஒருவர் கூட குறிப்பிடாத, விஷயம், வாசிப்பு அனுபவமும் அது தரும் இன்பமும் தான், நண்பர்கள் சிலர் கூறும் மது தரும் போதையை விடவும், நல்ல புத்தகத்தின் சில பக்கங்கள் தரும் இன்பம் மிக அதிகம் என்றே என்னால் கூற முடியும், அதிலும் மதுவின் வசப்பட்டபின் தான் யார், எங்கிருக்கிறோம் என்பதையும் மறந்து தன சுய மரியாதையை பற்றி சிறிதும் யோசிக்க முடியாமல் நடு சாலையில் தடுமாறும் நண்பர்களின் உல்லாச சுற்றுலாகளை விடவும், சில வரிகளை படித்து அடக்க முடியாத சிரிப்புடனோ, நீர் தளும்பி நிற்கும் கண்களுடனோ நிமிர்ந்து சக பயணிகளின் ஆச்சர்ய (அல்லது) பரிதாப பார்வைக்கு இலக்காகும் ரயில் பயணங்கள் எந்த வகையிலும் தாழ்ந்ததாய் தோன்றவில்லை.
மீண்டும் ஜே ஜே யிலிருந்து சில வரிகள்,
பயம் ஜே ஜே என்னை, என் உலகத்தை இல்லாமல் செய்துவிடுவானோ என்று, நானோ கனவுகளிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவன், அவையே எனக்கு தின்பண்டம், ஆனால் கனவுகள் அவன் கைகளில் சல்லா துணிகளை போல் கிழிபடுகின்றன, காதலியின் புன்முறுவலில் நான் மயங்கி நிற்கும் போது 'இது புன்முறுவல் அல்ல, பொய்' என்கிறான், 'ஆசை உன் மீது அல்ல, குழந்தை பெற்றுக்கொள்ள தான்' என்று தொடரவும் செய்வான் என்றால் நான் என்ன தான் செய்வது,
ஜே ஜே என் மனதில் தோற்றுவித்த மற்றொரு உணர்ச்சி லகரி, எதிர்பாராத இடத்தில் பள்ளத்தாக்கின் விளிம்பை வந்தடைந்தது போன்ற ஆச்சர்யம், அவன் பாஷை ஒரு சவரக்கத்தி, சொல்முறை கவிதை, தாண்டல் வீரன் ஓட்டபந்தயதில் தாவி செல்வது போல் வாக்கியங்களை தாண்டி செளிக்றான், முதல் வாக்கியத்தை வாசித்து இரண்டாவது வாக்கியம் தேடி கிடைக்காமல் நேராக மூன்றாவது வாக்கியத்தை பற்றிகொள்ளும்போது உண்டாகும் உணர்வை தான் மூளையின் நரம்பில் லகரியாக உணர்கிறேன்"
நண்பர் ஜெட்லி பலமுறை என்னை எழுதும்படி கூறிவந்துள்ளார், அப்போது அவர் சொல்லும் வாக்கியம் "முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க ஆசைபடாதே" என்பது தான், நான் சிக்ஸர் அடித்தேனா டக் அவுட் ஆனேனா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்
நன்றி
சங்கர்