Wednesday, December 9, 2009

வழி சொல்பவனின் வலி.

வழி சொல்பவனின் வலி.


நம்ம ஊர்ல ஒரு நாளைக்கு பல ஆயிரம் பேர் வழி தெரியாமல் தவிக்கின்றனர்(மப்பில் வீடு திரும்பாமல் இருப்பவர்களை பற்றி சொல்லவில்லை!).ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விதமான தேடல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. தங்கள் உறவுகளையோ, நேர்முக தேர்வுக்கு செல்லும் பணி இடத்தையோ, பிரபல மருத்துவரையோ, பிரபல சாமியரையோ, கோயிலையோ,தியேட்டரையோ என்று மனிதர்கள் தினமும் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.இங்கு நான் பகிர்ந்து கொள்ள போவது சரியான வழி கேட்பவர்களுக்கு வழி சொல்பவனின் அவஸ்தைகளை(வலிகள்) மட்டுமே.



நம்ம ஊரில் எதுக்கெல்லாம் கூட்டம் சேருதோ இல்லையோ ரெண்டு விஷயத்துக்கு கூட்டம் கண்டிப்பா சேரும்.முதலில் விபத்து, அது என்னமோ தெரியலங்க டம்னு சவுண்ட் வந்தா போதும் எங்கே இருந்து வேடிக்கை பார்க்க ஆள் வராங்கனு தெரியாது.அப்படி ஒரு கூட்டம் கூடிடும் அடிபட்ட ஆள் சுவாசிக்க காத்து கூட விடமாட்டங்க.அந்த கூட்டத்திலும் ஒரு சிலர்
தண்ணீர் பாக்கெட்,சோடா வாங்கி கொடுக்கும் நல்உள்ளங்களும் இருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கு இல்லை.



ரெண்டாவது வழி சொல்பவன், நம்ம ஊரில் வழி சொல்பவர்களுக்கு குறையில்லை.ரெண்டு விஷயங்கள் எப்போதுமே ப்ரீயா கிடைக்கும்
ஒன்று அறிவுரை மற்றொன்று வழி சொல்லுதல்.சில பேரு இளம்
பெண்களுக்கு மட்டும் வழி சொல்வார்கள்.சிலர் வழி தெரியாமல்
திணறுபவர்களுக்கு தேடி போய் வழி சொல்வார்கள்.பல இடங்களில் ஒரு கூட்டமாக இருந்து கொண்டு அவர்களுக்குள் விவாதித்து
தப்பான வழி சொல்பவர்கள் ஏராளம்,அவர்களை விட்டுவிடுவோம்.

முதல் வலி :

சில சமயம் வழி மற்றும் ஒரு குறிப்பிட இடத்தை கேட்பவர்கள் நம்மை நொண்டி நொங்கு எடுத்து விடுவார்கள்.

இப்படித்தான் ஒருத்தர் " பரணி லாட்ஜ் எங்கே இருக்கு? " என்றார்.
"இதோ பக்கத்தில் தான் போங்க" என்றேன்.

அவர் "எவ்ளோ நேரம் ஆகும்"...."நடந்து போய் விடலாமா"...
"லெப்ட் சைட்ஆ ரைட் சைட்ஆ??"... என்று கேள்வியை
அடுக்கி கொண்டே போனார்.
ஒரு ரெண்டு எட்டு எடுத்து வச்சா லாட்ஜ் வந்துரும் அதுக்கு
டஜன் கேள்வி கேட்டு நம்மை டென்ஷன் ஆக்கி விடுவார்கள்.

***********************************************

நான் பொதுவாக யாரையும் தேடி போய் வழி சொல்வதில்லை.
அது வேலியில் போற ஓணானை பேன்ட்டுக்குள் விட்டதருக்கு
சமம்.(அப்போ நாங்கெல்லாம் தேடி போய் வழி சொல்றோமா??
என்று நீங்கள் கேட்பது புரிகிறது...சும்மா ஒரு ப்லோவில்
எழுதிட்டேன்..ப்ரீயா விடுங்க!!)

இப்படிதாங்க சுமார் ஏழு வருஷங்கள் முன்னாடி ஒருத்தர்
ரோடு ஓரத்தில் வழி தெரியாமல் பைக்கில் நின்னுட்டு
இருந்தார்.சொன்னா நம்பமாட்டிங்க அப்போல்லாம் தினமும்
நான் யாருக்காவது உதவி பண்ணலைனா எனக்கு தூக்கமே
வராது.அதனால நானே போய் அவரிடம்

"என்ன சார் எங்கே போகணும்" .

"அடையார் டிப்போ பெட்ரோல் பங்க் போகணும்,
வழி சரியா தெரியலை" என்றார்.

"இங்கிருந்து நேரா போன அடையார் டிப்போ தான் சார்
வரும்" என்று கூறினேன் நான்.

அப்போது தீடிர் என்று எங்கோ இருந்து இன்னொரு நபர்
வந்தார் "எங்கே , அடையார் டிப்போ தானே இதோ இந்த
எதிர் ரோட்டில் போங்க ப்ரீயா இருக்கும்" என்று தன்
பங்குக்கு உதவி செய்தார்.

ஒரு வேளை என்னை போல இவருக்கும் யாருக்காவது
உதவலனா தூக்கம் வராது போல என்று நினைத்த நேரத்தில்
வழி கேட்ட ஆள் கொஞ்சம் ஓவர்ஆ பேச ஆரம்பிச்சுட்டாரு.

"யோ அடையார் டிப்போவுக்கு வழி கேட்டா ஒருத்தன்
இப்படி போ இன்னொருத்தன் அப்படி போனு சொல்றிங்க...
என்னயா ஒரு மனுஷன் வழி கேட்ட ஒழுங்கா
சொல்றிங்களா..." என்று எகிற ஆரம்பித்தார்.

இவனுக்கெல்லாம் உதவி செய்னுமா என்று அங்கிருந்து எஸ்
ஆகி விட்டேன்.

இந்த வழி சொல்லும் வழியால் வந்த வலி நெஞ்சில் வடு
போல் இருந்ததால் அதன் பின்பு யாருக்கும் தேடி போய்
வழி சொல்வதில்லை.

*********************************************************

சில நாட்களுக்கு முன்பு :

மாருதி காரில் ஒரு நாலு பேர் கடை முன் வண்டியை நிறுத்தி
ஒருவர் வந்து பாபாலால் பவன் எப்படி போவது என்று கேட்டார்.

சிக்னல் லெப்ட் திரும்பி பெரிய கோவில் தாண்டியவுடன் திரும்பவும்
லெப்ட் எடுத்தால் அங்கே தான் பாபாலால் பவன் என்றேன்.

தேங்க்ஸ் என்று போய் காரில் அமர்ந்தார்.

ஒரு ரெண்டு நிமிடம் கழித்து இன்னொருவர் இறங்கி வந்து
"சார் இந்த பாபாலால் பவன் எங்கே இருக்கு?" என்றார்.

திரும்பவும் அதே வழியை சொன்னேன்.உடனே அவர்
"சிக்னல் லெப்ட் தான் போனுமா இல்ல அடுத்த வர லெப்ட்
திரும்பன வராதா" என்றார்.

"வரும் ஆனா கொஞ்சம் சுத்து" என்றேன்.

அதே காரில் இருந்து இன்னொருவன் இறங்கி வந்தான்
"சார் இந்த பாபாலால் பவன் எப்படி போனும்" என்றான்.

"போடாங்" இதற்கு மேல் அச்சில் ஏற்ற விருப்பமில்லை என்ற
காரணத்தால் வழி சொல்பவனின் வலியை புரிந்து வழி
கேட்பவர்கள் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும்,

இது போல் உங்களுக்கும் வழி சொன்னதில் ஏதாவது
அனுபவம் இருந்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளவும்.

இந்த இடுகை பிடிச்சு இருந்தா கண்டிப்பா ஒட்டு போடுங்க,
மற்றும் கமெண்ட் போட்டால் ஒரு பூஸ்ட் மாதிரி இருக்கும்.

நன்றி
ஜெட்லி சரண்.

4 comments:

Ashok D said...

இந்தாப்பா பூஸ்ட் :)

பெசொவி said...

நானும் வலியப் போய் வழி சொல்லும் ஆசாமிதான். எனக்கும் சங்கடங்கள் இருந்திருக்கு, ஆனாலும், இது ஒரு வகை உதவி என்று நினைப்பததால், எத்தனை பட்டாலும், இந்த குணத்தை நான் மாற்றிக் கொள்வதாய் இல்லை.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல காமெடி.

புலவன் புலிகேசி said...

வழி கேட்ட அனுபவம்தான்..என் அறை நண்பர் ஒருவரிடம் எதாவது ஒரு இடத்திற்கு போக வழி கேட்டால் நிச்சயம் அது ஒரு ஊர்சுற்று வழியாகத்தான் இருக்கும்...தெரியலன்னாலும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்குவாரு...