Thursday, November 12, 2009

சென்னை மழையும் பின்நவீனத்துவமும்

வெற்றி, வெற்றி, வரலாறு காணாத வெற்றி, போன பதிவுக்குக் கிடைத்த ஓட்டுகளைதாங்க சொல்றேன், தமிழர்கள் அறிவியல் பார்வை கொண்ட அறிவுபூர்வமான ஆராய்ச்சிகளை எப்போதும் வரவேற்பார்கள் என்பதற்கு இது இன்னுமொரு அத்தாட்சி. இந்த மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், அப்பதிவின் கடைசி பத்தியில் சொன்ன சொல்லை காப்பாற்றவும் வேண்டி இந்த பதிவு.


முதலில் பின்நவீனத்துவம் என்பதை சுருக்கமாக சொல்ல முயற்சி செய்கிறேன், இவ்வளவு சிக்கலான விஷயத்தை எப்படி சுருக்கமாய் சொல்வது என்ற மலைப்பு தோன்றினாலும், அவ்வளவு பெரிய ராமாயணத்தையே "விட்டான் ராமன், கெட்டான் ராவணன்" என்று ஒரு வரியில் கூறிய சொல்லின் செல்வர்கள் பிறந்த மண்ணில் தான் நானும் வாழ்கிறேன் என்ற எண்ணம் தந்த தைரியத்தில், யோசித்துக்கொண்டிருந்தபோது காணக்கிடைத்தது, எங்கள் நாயகன், நடிப்பின் பரங்கி எஸ்ஜே சூர்யா (குறிப்பு 1: இமயமலையை இமயம் என்று சொல்லலாம் என்றால், பரங்கிமலையை பரங்கி என்று சொல்வதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன், ஏதோ விரலுக்கேற்ற வீக்கம்; குறிப்பு 2: நன்றாக கவனிக்கவும், பீரங்கி இல்லை பரங்கி, அப்புறம் அவர் அதற்கு வேறு அர்த்தம் சொல்வார்; குறிப்பு 3: பரங்கிமலை ஜோதியில் வெளியிடும் தரமுடைய படங்களை எடுத்தவர் என்பதால் இந்த பட்டத்தை வழங்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்; இன்னுமொரு குறிப்பு: ஜோதி தியேட்டர் இப்போது உள்கட்டமைப்பு சிறப்பாக மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்) நடித்த அ.ஆ. படத்தின் ஒரு காட்சி, "ஒரு விஷயம் இருக்கு ஆனா இல்லை, இல்லை ஆனா இருக்கு" என்று அவர் பேசிய ஒரு வசனம் தான் என்னை நிமிர்ந்து அமர வைத்தது. இதை விட எளிதாய், சிறிதாய், தெளிவாய், சொல்வதற்கு, பின்நவீனத்தில் எங்கள் ஆசான் (விஜயகாந்த படம் இல்லை) சாருவால் கூட முடியாதே என்று மீண்டும் மனம் சோர்ந்தது. இருந்தாலும் 'ஸீரோ டிகிரியை' ஒரே இரவில் நூற்றிநாற்பது பக்கம் படித்ததை நினைவு கூர்ந்து, மனதை தேற்றிக்கொண்டு, நீங்கள் தந்த, தரப்போகும் ஆதரவின் தைரியத்தில் எழுத துவங்கிவிட்டேன்.




பின்நவீனத்துவம் என்றவுடன் முதலில் சொல்லப்படும் வார்த்தை கட்டுடைத்தல். அதாவது நீங்கள் பார்க்கும் விஷயத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அக்குவேறு ஆணிவேராய் பிரித்து மேய்வது, அதில் ஒரு புது அர்த்தம் காண்பது. தினம் தினம் தாம்பரம் முதல் தரமணி வரை பயணிக்கும் நான், போனவாரம் வரை நம்பிக்கொண்டிருந்தேன், அய்யாக்களும் அன்னைகளும் விமானம் ஏற வந்து போகும் வழி என்பதால் அழகாய் பராமரிக்கபடுகிறது இந்தச்சாலை என்று, அனைத்தையும் புரட்டிப்போட்டது இந்தவார மழை, பார்க்க பளபளவென்றிருந்தாலும், அனைத்தும் அவ்வப்போது செய்யப்படும் ஒட்டுவேலைகளின் ஜாலமே என புரியவைத்தது, என் எண்ணத்தை கட்டுடைத்தது மட்டுமல்லாமல் இதற்குமேல் உடைத்தால் மணல் தான் மிஞ்சும் என்று எண்ணுமளவு ஜல்லி ஜல்லியாய் பிரித்துபோட்டது மாமழை. இதற்கு
மேல் கட்டுடைத்தல் தேவையா??




வெறும் தரைவழி போக்குவரத்திற்கான ஊடகமாகவே பார்க்கப்பட்டு வந்த சாலைகளை, நீர்வழித்தடமாகவும் தோன்றவைத்த பெருமை இந்த மழையையே சாரும், மேலும், ஏரியாய் இருந்த இடங்களை தூர்த்துதான் இந்த சாலை அமைக்கப்பட்டது என்பதையும், இன்னும் சில ஆண்டுகளில் இந்த இடங்களெல்லாம் கடலின் ஒரு பாகமாய் மாறக்கூடும் என்பதையும் ஒருங்கே உணர்த்தி கடந்த காலத்தையும் எதிகாலத்தையும் ஒன்றாய் காட்சிப்படுத்திய இந்தப் பருவமழை கண்டிப்பாய் ஒரு பின்நவீனக்காட்சிதான்.



இப்போதாவது புரிந்ததா கொட்டும் மழையென்பது இயற்கை எழுதும் பின்நவீன கவிதை என்று? எந்த ஒரு விஷயத்தையும் இப்படி பின்நவீனநோக்கில் பார்க்கலாம் என்பதை இன்னும் புரிந்துகொள்ள முடியாதவர்கள், பின்னூட்டத்தில் குறிப்பிட்டால், பின்நவீன பார்வைக் குறைபாட்டை நீக்கும் சிறப்பு கண்கண்ணாடி சலுகை விலையில் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மழை நின்றுவிட்டதாலும் நிதிப்பற்றாகுறையாலும் முந்தய பதிவில் குறிப்பிட்ட "மழையும் பள்ளி விடுமுறையும்" என்னும் ஆராய்ச்சி அடுத்த மழை வரும்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த வருத்ததோடு தெரிவித்துக்கொள்கிறோம்.


படங்கள் நன்றி: ஜாக்கி சேகர், cinesouth.com, techshout.com, என் N-70

நன்றி
சங்கர்


18 comments:

கடைக்குட்டி said...

me de 1st????

சங்கர் said...

பிரபா, நீங்க பின்னூட்டம் போடும் முன்பே கேட்டு விடுகிறேன்,

பதிவை தமிழ்மணத்தில் எப்படி இணைப்பது?
கிடைத்த வாக்குகளை எப்படி பார்ப்பது?

கொஞ்சம் விளக்கினால் நல்லது

கடைக்குட்டி said...

எஸ்ஜே சூரியா (குறிப்பு 1: இமயமலையை இமயம் என்று சொல்லலாம் என்றால், பரங்கிமலையை பரங்கி என்று சொல்வதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன், ஏதோ விரலுக்கேற்ற வீக்கம்; குறிப்பு 2//
//

எத்தன குறிப்பு... பின்றீயே மக்கா..

கடைக்குட்டி said...

எங்கள் ஆசான் (விஜயகாந்த படம் இல்லை) சாரு//

செம நக்கல்ங்க உங்களுக்கு,,,,

கடைக்குட்டி said...

பின்னூட்டத்தில் குறிப்பிட்டால், பின்நவீன பார்வை குறைபாட்டை நீக்கும் சிறப்பு கண்கண்ணாடி சலுகை விலையில் வழங்கப்படும்//

ஹா ஹா.. ரசித்து சிரித்தேன்...

இதுவும் கலக்க போகுது :-)

சங்கர் said...

நீங்கதான் First, நன்றி நன்றி

ஆராய்ச்சிகள் பல செய்வதால் இந்த குறிப்பெடுக்கும் பழக்கம் வழக்கமாகிவிட்டது

பிரபாகர் said...

அன்பு சங்கர்,

இங்கு மழைக்கு சவால் விடும் சாலைகள். என்ன மழை பெய்தாலும் அடுத்த நிமிடம் தண்ணீர் ஏதுமின்றி மழை பெய்ததா என ஐயுறச்செய்யும்.

தமிழ் மணத்தில் யாரோ ஒரு புண்ணியவான் இணைத்து ஒரு மைனஸ் ஓட்டைப் போட்டுவிட்டும் போயிருக்கிறார். நீங்கள் பதிவிட்ட மழை பாதித்த சாலையிம் பத்து மணி நேரம் பயணிக்க அவருக்கு சாபமிடுவோம். அனுப்பு என்ற பொத்தானை அழுத்துங்கள் அவ்வளவுதான். உயர்ந்து நிற்கும் கட்டைவிரலை அழுத்தி ஒரு + ஓட்டை போட்டு விட்டீர்களானால் நான் இரண்டு. கிடைத்த வாக்குகள் 2/2 என்றால் இரண்டில் இரண்டு பாசிடிவ். இப்போது நான் உங்களுக்கு வாக்களிக்கும்போது 0/1 என இருந்தது. கிடைத்த ஒரு ஓட்டும் மைனஸ். நான் அளித்த பின்பு 1/2. இரண்டில் ஒரு ப்ளஸ். இதெல்லாம் திரியும் பாஸ், சும்ம்ம்மா கலாய்க்கதீங்க என்பது கேட்கிறது.

//வெறும் தரைவழி போக்குவரத்திற்கான ஊடகமாகவே பார்க்கப்பட்டு வந்த சாலைகளை, நீர்வழித்தடமாகவும் தோன்றவைத்த பெருமை இந்த மழையையே சாரும், //

மானக்கெட்ட அரசியல் வாதிகளையே சாரும்.

நல்லாருக்கு சங்கர்.

பிரபாகர்.

சங்கர் said...

விளக்கத்திற்கு மிக்க நன்றி பிரபா

//
இங்கு மழைக்கு சவால் விடும் சாலைகள். என்ன மழை பெய்தாலும் அடுத்த நிமிடம் தண்ணீர் ஏதுமின்றி மழை பெய்ததா என ஐயுறச்செய்யும்.//

ஹ்ம்ம், ஏக்க பெருமூச்சை தவிர வேறு என்ன செய்வது

//மானக்கெட்ட அரசியல் வாதிகளையே சாரும்.//

உங்களுக்கு பின்நவீன பார்வை இன்னும் வரவில்லை, கம்பேனியின் சிறப்பு பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெற வேண்டுகிறோம்

ப்ரியமுடன் வசந்த் said...

விளக்கமும் கண்ணாடியும் ரசிக்கவைத்தது சரண்/...

சங்கர் said...

//விளக்கமும் கண்ணாடியும் ரசிக்கவைத்தது சரண்/... //

சாருக்கு ஒரு கண்ணாடி பார்சல்

கிருஷ்ண சேதுராமன் said...

நல்ல சிந்தனை. . . நீங்கள் சொல்லும் விதம் கொஞ்சம் திகைக்க வைக்கிறது. .
கி.சேதுராமன்

ரவி said...

good way of writing style..............

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

லெமூரியன்... said...

\\வெறும் தரைவழி போக்குவரத்திற்கான ஊடகமாகவே பார்க்கப்பட்டு வந்த சாலைகளை, நீர்வழித்தடமாகவும் தோன்றவைத்த பெருமை இந்த மழையையே சாரும், மேலும்,...//


\\இன்னும் சில ஆண்டுகளில் இந்த இடங்களெல்லாம் கடலின் ஒரு பாகமாய் மாறக்கூடும் என்பதையும் ஒருங்கே உணர்த்தி கடந்த காலத்தையும் எதிகாலத்தையும் ஒன்றாய் காட்சிப்படுத்திய இந்தப் பருவமழை கண்டிப்பாய் ஒரு பின்நவீனக்காட்சிதான்.//

அருமையான பதிவு..........மேல் குறிப்பிட்ட பகுதிகள் நான் மிகவும் ரசித்தவை.

Chitra said...

super..... nallaa vaareenga......!!!!

சங்கர் said...

@ Chitra

@ லெமூரியன்

@ TamilNenjam

@ செந்தழல் ரவி

@ Sethuezhil

@ கடைக்குட்டி

அனைவருக்கும் நன்றி

அன்புடன் அருணா said...

ரொம்ப நல்லா புரிஞ்சுது பின்வீனத்துவம்!

பெசொவி said...

தெரிஞ்ச விஷயத்தை வச்சு தெரியாத விஷயத்தை புரிய வைக்கிறது தான், சித்தாந்தம்.

அந்த வழியில, நீங்க மழை பெய்த சாலைகளை வைத்து பின்னவீனத்துவத்தப் பத்தி விளக்கிட்டீங்க.

சிறந்த சித்தாந்தி என்ற பட்டத்தை உங்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.