Sunday, October 25, 2009

காமம் - ஒரு பரிசோதனை - சில பார்வைகள் - 2

இரண்டாம் பாகத்தை சற்று வேறுவிதமாய் தான் எழுத இருந்தேன், அதை மாற்றியது முதல் பாகத்தை வலையேற்றிய சில மணி நேரங்களில் தோழி ஒருவரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு. அவர் மூச்சு விடாமல் பேசிய அந்த பதினைந்து நிமிடங்களின் சுருக்கம் இதோ,

* காமம் என்பது இயல்பான ஒன்று அதனை இப்படி எழுதிக் காட்டவேண்டிய அவசியம் இல்லை
* காமம் என்பது நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டிய விஷயம், அதனை பொது இடத்தில் எதிர்கொள்ளும் சராசரி மனிதனின் எதிர்வினை அருவெருப்பாகவோ அசட்டு சிரிப்பாகவோ தான் இருக்கும் (இருக்க வேண்டும்)
* மகுடேஸ்வரனுக்கும், உனக்கும் (சங்கராகிய எனக்கு) இது புதிதாய் தோன்ற காரணம் உன் பார்வையில் இருக்கும் குறைதான் (வக்கிரம் என்று நேரடியாய் சொல்லவில்லை எனினும்)
* மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவன் என்று காட்டிக்கொள்ளவே இதை எழுதி இருக்கிறாய்,
* காதல் என்பது காமம் மட்டுமல்ல, காமத்தையும் தாண்டி வேறொன்று இருந்தால் தான் அது காதல், காமம் மட்டுமே என்றால் நமக்கும் மிருகங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கமுடியும்
* கடைசியாக, இந்த காதல், பாசம், உறவுகள், நாகரிகம் அனைத்தும் வெளிவேஷங்கள் தான், உரித்துப் பார்த்தால் கடைசியில் பல்லிளிப்பது சுயநலம் மட்டும் தான். இதை உணராமலேயே சந்தோஷமாய் தான் வாழ்ந்து வருகிறோம், அப்படியே வாழலாமே

இந்த பேச்சுக்கு (சொற்பொழிவுக்கு) பின், மிக அவசியம் என்றாலொழிய, என் கருத்துக்களை மறுப்பவர்களோடு விவாதம் செய்வதோ, அவர்கள் கருத்துக்களை விமர்சிப்பதோ என் இயல்பாய் இல்லாத காரணத்தால், சில வாக்கியங்களே பேசி அழைப்பை துண்டித்தேன்.

அதன் பின் யோசித்தபோது தோன்றிய சில காரணங்கள், தோழி நன்கு படித்தவர் (வழக்கறிஞர்), சென்னை மாநகரில் நவநாகரிக சூழலில் பிறந்து வளர்ந்தவர், பரந்த வாசிப்பு அனுபவம் உள்ளவர், அதனால் காமத்தை இயல்பாக பார்க்கும் மனமுதிர்வு ஏற்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் விட, அக்கட்டுரையும், கவிதைகள் அனைத்தும் ஓர் ஆணின் பார்வையில் அமைந்திருப்பதும் முக்கிய காரணம், எனக்கு பெண்களின் மனவுலகம் பற்றி தெரியாது, ஆண்களின் எண்ணவோட்டங்கள் பற்றிய புரிதலிலேயே பல சந்தேகங்கள் உண்டு. சுருக்கமாய் சொல்வதென்றால் இவையனைத்தும் என் தனிப்பட்ட கருதுக்களன்றி வேறில்லை.

காதலும் காமமும் வேறில்லை என்ற என் நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை. இதை காதலில் இருந்தபோது 'உன்னை என்னிடம் ஈர்ப்பது எது' எனக் கேட்ட என் காதலியிடமும் கூறி இருக்கிறேன். 'அப்படியென்றால் காமம் தீர்ந்தபின் என்னை விட்டு சென்று விடுவாயா' என்ற அடுத்த கேள்விக்கு நான் சொன்ன பதில் 'காமம் தீரும் தினம் என் கடைசி தினமாகத்தான்இருக்கும்'

ஆனால் இதுபோன்ற சூழலில் வளரும் எல்லோரும் தோழியை போன்ற மனமுதிர்வுடன் இருப்பார்கள் என கூற இயலாது, செக்ஸ் கல்வி பற்றி பேசிக்கொண்டிருந்தபோது "என் குழந்தைகளுக்கு, அவர்கள் பதின்வயதில் நிச்சயமாக காமத்தை கற்பிப்பேன்" என நான் கூறியதற்கு "நீயும் உன் மனைவியும் லைவ் டெமோ செய்து காட்டுவீர்களா?" என நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி ஞாபகம் வந்தது, நண்பரின் தந்தை ஒரு மருத்துவர், தருமமிகு சென்னையில் நவநாகரிக சூழலில் உயர்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவருடைய புரிதலே 'செக்ஸ் கல்வி என்றால் உடலுறவு மட்டும்தான்' என்ற அளவில் இருக்கும்போது கிராமத்திலேயே பிறந்து வளர்ந்த என் போன்றவர்களின் கதியை என்ன சொல்ல,

தூர்தர்ஷனும், தினமலர், தினத்தந்தியும் மட்டுமே சாத்தியமான கிராமத்தில் (இன்று வரை எங்கள் ஊரில் சாட்டிலைட் சானல் இல்லை, இது பற்றி வேறொரு பதிவில் சொல்கிறேன்) கழிந்த பதினேழு வருடங்களில் காமத்தை / உடலை அறிய சந்தர்ப்பங்களே ஏற்பட்டதில்லை, போதாதற்கு உயர்நிலை வகுப்புகளில் 'படிக்கிற புள்ள' என்ற பட்டத்தால், நண்பர்களின் கலந்துரையாடல்களிலும், கடைசி வரிசை கதை வாசிப்புகளிலும் எனக்கு இடமில்லாமல் போனது. வாசிக்க கிடைத்த வாரமலரும், குமுதமும் உதட்டு முத்ததிற்கு கொடுத்த முக்கியத்துவம், குழந்தை பிறப்புக்கே அதுதான் காரணம் என்ற எண்ணத்திலேயே பதின்வயதுகளை கழிக்க செய்தது,

விந்துவெனும் விந்தை இருப்பதே தெரியாததாய் வினோத வளர்இளம் பருவத்தில், சென்னை வாழ்க்கை உண்டாக்கிய தலைகீழ் மாற்றங்கள் குறித்து அடுத்த பாகத்தில் சொல்கிறேன்

முடிக்கும் முன், மீண்டும் மகுடேஸ்வரன்

உறவு சொல்லி அழைப்பது
பண்பாடாக இருக்கிறது

ஏன்,
எளிமையாக இல்லை
உறவுக்கு அழைப்பது



நன்றி
சங்கர்

8 comments:

பிரபாகர் said...

அடல்ட்ஸ் ஒன்லி மேட்டர சிம்பிளா எழுதியிருக்கேங்க தோழா... இது பற்றி நிறைய விழிப்புணர்ச்சி வேண்டும்... எல்லோரும் தெரிந்து தெளிய வேண்டிய விஷயம்.

ஓட்டுக்கள போட்டாச்சி(தமிழ்மணத்துக்கு அனுப்பி).

கலக்குங்க...

பிரபாகர்.

சங்கர் said...

எப்போதும் போல முதல் கருத்து, நன்றி பிரபா,

வயது வந்தவர்கள் (Adults) மட்டுமல்ல, வளர் இளம் பருவத்தவர்களும் (Adolescence) புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உலக்ம் எங்கும் ஒரே மொழி...,

நூறுக்கு நெருங்கிக் கொண்டிருப்பவர் ந்நூறு அடிக்க வாழ்த்துக்கள்

ஆண்ட்ரு சுபாசு said...

உங்களை தொடரும் நூறாவது நபர்.சில இடங்களில் உங்களுடனும்,உங்கள் தோழியின் பேச்சு சுருக்கத்தின் படிக்கு பல இடங்களில் அவர்களுடனும் முரண் படுகிறேன் .மற்றபடிக்கு இது எழுதப்பட வேண்டிய பதிவு.மேலும் தொடர வாழ்த்துக்கள்.

SUBBU said...

உறவு சொல்லி அழைப்பது
பண்பாடாக இருக்கிறது

ஏன்,
எளிமையாக இல்லை
உறவுக்கு அழைப்பது

:))))

நிகழ்காலத்தில்... said...

\\காதலும் காமமும் வேறில்லை என்ற என் நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை\\

இதேதான் என் நிலைப்பாடும் :))

வாழ்த்துக்கள்

சங்கர் said...

"உலக்ம் எங்கும் ஒரே மொழி...,

நூறுக்கு நெருங்கிக் கொண்டிருப்பவர் நூறு அடிக்க வாழ்த்துக்கள்"

வருகைக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி

உங்கள் வாக்கு பலித்தும் விட்டது

சங்கர் said...

"" ஆண்ட்ரு சுபாசு said...
October 26, 2009 2:23 AM உங்களை தொடரும் நூறாவது நபர்.சில இடங்களில் உங்களுடனும்,உங்கள் தோழியின் பேச்சு சுருக்கத்தின் படிக்கு பல இடங்களில் அவர்களுடனும் முரண் படுகிறேன் .மற்றபடிக்கு இது எழுதப்பட வேண்டிய பதிவு.மேலும் தொடர வாழ்த்துக்கள். ""

வருகைக்கு நன்றி, தொடர்ந்து வர வேண்டுகிறோம்,

மிக நிச்சயமாய் விவாதிக்கபட வேண்டிய விஷயம், மனம் திறந்து பேசினால் மட்டுமே புரிதல் சாத்தியமாகும்