Monday, January 4, 2010

போர்க்களம் - ஒரு பார்வை.

போர்க்களம் - ஒரு பார்வை.





இப்படி ஒரு படம் வர போகுதுனு பல பேருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. இதுல என்ன ஸ்பெஷல்னு கேட்டா? நம்ம பொல்லாதவன் கிஷோர் இதில் ஹீரோவாக வருகிறார். ட்ரைலர் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு கண்டிப்பா படத்தை பார்க்கணும்.புதுமுக இசையமைப்பாளர் ரோஹித் குல்கர்னி மியூசிக் பண்ணியிருக்கார்.பண்டி சரோஜ்குமார் என்ற புதுமுகம் இயக்கியுள்ளார்.


பண்டிசரோஜ்குமார் அவர்கள் இந்த படம் ஒரு புது முயற்சியாக
இருக்கும் என்கிறார்...தமிழக மக்கள் எப்போதும் புது முயற்சியை
வரவேற்ப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.கிஷோருக்கு பொல்லாதவன்
மற்றும் வெண்ணிலாக்கு பிறகு சொல்லி கொள்ளும் படி எதுவும்
அமையவில்லை....பொருத்து இருந்து பார்ப்போம் போர்க்களத்தில்
கிஷோரை......


பாடல்கள் அனைத்தையும் முத்துக்குமார் எழுதியுள்ளார்.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஒரே தீம்மாக இருக்கிறது,
இருந்தாலும் கேக்க நன்றாக தான் இருக்கிறது.இந்த பட
பாடலை எனக்கு அறிமுகப்படுத்திய பெங்களூரை சேர்ந்த
நண்பர் ஹசனுக்கு நன்றி.....

படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன அனைத்துமே
ஆண்குரல் தான் பெண்குரல் பாடல் எதுவும் இல்லை
என்பதே ஒரு வித்தியாசமான விஷயம்.




# போர்க்களம் தீம் மியூசிக்

இந்த மியூசிக் ட்ரைலரில் வருமே அதே மியூசிக் தான் கேக்க
நன்றாக தான் இருக்கிறது.ஒரு ரிச்நெஸ் தெரிகிறது...


# அரண் திறன்

தீம் மியூசிக்கின் மெட்டுக்கு பாடல் இது.இதில் ஸ்பெஷல் கே.கேவின் வாய்ஸ் தான்.ஆள் சும்மா பின்னி எடுத்து இருக்கிறார்.
பாட்டை கேட்டாலே ஹீரோவின் கேரக்டர் பற்றி தெரிந்து
கொள்ளலாம்.கொஞ்சம் ஓவர் ஆக தான் இருக்கு இருந்தாலும்
படம் வந்தவுடன் தான் தெரியும்....

# இந்த பூமியில் :

ஷான் அவர்கள் பாடியுள்ள இந்த பாடல் நன்றாக தான் இருக்கு...
ஷானின் ஷார்ப்பான வாய்ஸ் இதில் ப்ளஸ்.....


# உன்னாலே: (இது தான் என் பேவரைட்).

நம்ம எஸ்.பி.பி.சரண் பாடியுள்ள இந்த பாடல் தேஞ்சு போன
சி.டி யில் குரல் கேட்டால் எப்படி இருக்கும் அந்த மாதிரி
வித்தியாசமா இருக்கும்.(கிண்டலுக்கு சொல்லல நல்லா இருக்கும்னு சொல்ல வந்தேன் ,எனக்கு அவங்க என்ன டெக்னாலஜி யூஸ் பண்ணாங்கன்னு தெரியாது).

# யாரோ இவன் யாரோ:

முதலில் வரும் trumphet மியூசிக்கை கேட்டலே உற்சாகம் பொங்கும்.
இதுவும் ஹீரோவை தூதி பாடும் பாடல் தான்.கார்த்திக்கின் குரல்
இந்த பாட்டுக்கு மேலும் பலம் சேர்க்கிறது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒரு வாரம் முன்னாடி எழுதியது:

((என் எண்ணமெல்லாம் இது தான்... ஸ்ரீகாந்த் நடித்த ரசிக்கும்
சீமானே போல் ட்ரைலாரை இருநூறு நாட்கள் ஒட்டாமல்
படத்தை சீக்கரம் வெளியிட்டால் நன்றாக இருக்கும்....))


நேற்று பேப்பர்இல் பொங்கல் ரிலீஸ் என்று போட்டிருந்தார்கள்..
பார்ப்போம்...அங்காடி தெரு கூட பொங்கல் ரிலீஸ் என்று முதலில்
போட்டார்கள் அப்புறம் நேத்து பிப்ரவரி ரிலீஸ் என்று போட்டு விட்டார்கள்......


ஓட்டை குத்துங்க....பின்னூட்டம் போடுங்க !!

உங்கள்
ஜெட்லிசரண்.

புத்தகத்திருவிழா 2010 - நாள் 5 (மீண்டும், கொஞ்சம் நீண்ட பதிவு, மீண்டும் மன்னிக்கவும்)


நான்கு நாட்கள் தினமும் எழுபது கிமீ பைக் ஓட்டியதால், லேசாக முதுகு வலிப்பது போல் தோன்றியதால், இன்று ட்ரெயினில் செல்ல முடிவு செய்தேன். மூன்று மணிக்கு சந்திப்பதாய் சொல்லிவிட்டு இரண்டரைக்கு தான் வீட்டை விட்டே கிளம்பினேன். மூன்றரை  மணிக்கு சேத்துப்பட்டு ஸ்டேஷனில் இறங்கி வெளியில் வந்தால், சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்தவுடன்  நாமும் கலந்து கொள்ளலாம் என்று ஆசை வந்தது, ஆனால் அவர்கள் பீல்டிங்  செய்யும் முறையை பார்த்தவுடன், நாளைக்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்பது  நினைவுக்கு வர, பேசாமல் நடையைக் கட்டினேன்.



ஈகா  அருகே பஸ் பிடித்து பச்சையப்பன் கல்லூரியில் இறங்கினேன், இறங்குமிடத்தில் நடைபாதையில் கடைகள் போட்டிருந்தார்கள், கடந்த நாட்களில், வண்டியில் வந்து, நேரே உள்ளே சென்று விடுவதால், பார்க்க முடியவில்லை. இன்று புரட்டி புரட்டித் தேடியதில் பத்து ரூபாய்க்கு சில முத்துக்கள் கிடைத்தன, அவற்றில் ஒன்று, நேற்று நூற்றிநாற்பது ரூபாய்க்கு வாங்கிய பொய்த்தேவு . பிற முத்துக்கள் கீழே.


உள்ளே சென்ற போது ஏற்கனவே வந்து வாங்கி முடித்துவிட்ட நண்பர்கள், ஜெட்லி, சித்து மற்று நடராஜ், அரங்க நுழைவாயிலிலேயே காத்திருந்தனர், ஏற்கனவே அவர்கள் டிக்கெட் எடுத்திருந்ததால் நீண்ட வரிசையிலிருந்து தப்பினேன்.



உள்ளே போய், நேரே தமிழினிக்குச் சென்று சிவராமனிடம் மதினிமார்கள் கதை புத்தகத்தை வாங்கிக் கொண்டு சுற்ற தொடங்கினோம், உயிர்மையையும் காலச்சுவடையும் சுற்றிச்சுற்றி  வந்த போதும், பதிவர்கள் யாரும் கண்ணில்படவில்லை. நானும் மீண்டும் மீண்டும் மொக்கை வாங்குவதை பொருட்படுத்தாமல், கொஞ்சம் சந்தேகப்படும்படியான தோற்றத்தில் இருப்பவர்களிடமெல்லாம் சென்று "நீங்க ப்ளாக் எழுதுறீங்களா?" என்று கேட்டுக்கொண்டிருந்தேன். நண்பர்கள் அவர்கள் பங்குக்கு, "டேய் சங்கர், அவரு போன்ல ஏதோ 'ப்ளாக்'னு பேசுறாரு, இவரு போட்டோ எடுக்குராருன்னு" சொல்லி நொண்டி விட்டுக்கிட்டிருந்தங்க. இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால், யாரும் "ப்ளாக்'னா என்ன?" என்று கேட்கவில்லை. "படிப்பேன், எழுதுவதில்லை" என்று தான் பலரும் சொன்னார்கள்.


இன்னும் கொஞ்சம் நேரம் சுற்றி விட்டு நண்பர்கள் கிளம்ப தொடங்கினார்கள். நானும் வெளியே வந்து பேசிக்கொண்டே நடந்தேன், வழியில் அப்போதும் ஏதோ வேளை செய்து கொண்டிருந்தார்கள், அதை பார்த்துவிட்டு நண்பர் ஜெட்லி கேட்ட கேள்வி "அடுத்த சனிக்கிழமைக்கு முன்னாடியாவது முடிச்சிடுவாங்களா?". அங்கே நின்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் குறித்த ஜெட்லியின் ரிப்போர்ட் இதோ.

புத்தக  கண்காட்சியில் பதிவர் சங்கருக்கு மூக்குடைப்பு


நான் புத்தக கண்காட்சிக்கு  திங்கள்கிழமை போலாம் என்றிருந்தேன் ஆனால் நண்பர்கள் அழைத்தால், இன்று சென்று இருந்தேன்.முன்னமே நான்  சென்றதால் அப்படியே பராக்கு பார்த்து கொண்டிருந்தேன்  பின்பு சித்து,நட்டு, சங்கர் அனைவரும் வந்து சேர்ந்தனர்..அதற்கு பின்பும் நான் பராக்கு தான் பார்த்து கொண்டிருந்தேன்.காரணம், நாளைக்கு எப்படியும் வர போறோம் ஏன் கூட்ட நெரிசல்ல சிக்கிக்கிட்டு.

சங்கருக்கு ப்ளாக்-ஒ-மேனியா வந்துவிட்டது காரணம் யாரை 
பார்த்தாலும் அவருக்கு பதிவர் போல் தெரிவதாக கூறினார்.
எனக்கும் இது போல் முன்னாடி இருந்தது ஆனால் இப்போது   
இல்லை....யாராவது ஒருத்தர் சும்மா நின்னா போதும் உடனே
அவரிடம் சங்கர் போய் "நீங்க பதிவரா" என்று கேட்டு விட்டு தான்
மறுவேலை பார்க்கிறார். 

மேட்டர் எதுவும் கிடைக்காமல் பள்ளி நுழைவாயில் பைக் பார்க்கிங்
பக்கத்தில் செம டிராபிக்இல்   நின்று கொண்டு ஏதாவது பதிவர் சிக்குவாரா என்று பார்த்து கொண்டிருந்த வேளையில் தான் அந்த கொடூர சம்பவம் நடந்தது...மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள்....



சங்கர் அவர்களை நோக்கி வாயில் பாக்கை மென்றபடி ஒருவன் வந்தான். அந்த மர்ம மனிதன் போட்டிருந்த உடையே கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அருகில் வந்த அந்த மர்மமனிதன் சங்கரிடம்

"எப்படிங்க உள்ளே போகணும்?" என்றான்.

"நேரா போங்க" என்று சங்கர் இடது புறம் கை காட்டினார்.

"இங்கே மாதிரி கூட்டமாதான் அங்கேயும் இருக்குமா?" என்றான்

"ஆமாங்க, இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை, கொஞ்சம் கூட்டம் இருக்கும்" என எக்ஸ்ட்ரா தகவல் தந்தார் சங்கர்.

"ரொம்ப தூரமா?" என்று மறுபடியும் கேட்டான்.

"இல்ல பக்கத்தில் தான்,அந்த காரை தாண்டியவுடன் கவுண்டர் இருக்கும்" என்றார் சங்கர்.

"டிக்கெட் எடுக்கணுமா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டான் அந்த மர்மமனிதன்....

"அஞ்சு ரூபாய்தான்...கடைசி கவுண்டர் போனா கூட்டம் இருக்காது" என்றார் சங்கர்

"உள்ளே புத்தகம் எல்லாம் எப்படி இருக்கும், அடுக்கி வச்சிருப்பாங்களா?" என்று ஒரு அற்புதமான கேள்வியைக் கேட்டான்,

அதற்கு சங்கர் சொன்னதை காதில் வாங்காமல், அந்த மர்மமனிதன் பூந்தமல்லி நெடுஞ்சாலையை நோக்கி நடந்து கொண்டிருந்தான்...இதை விட மூக்குடைப்பு வேறு வேண்டுமா...


பேக் டு சங்கர்

நண்பர்களுக்கு விடை தந்து அனுப்பி, பின் மீண்டும் உள்ளே நுழைந்தேன், சந்தியா பதிப்பக ஸ்டாலில் நுழைந்தபோது, இன்ப அதிர்ச்சியாக அங்கே சா.கந்தசாமி புத்தகங்கள் தேடிக்கொண்டிருந்தார். அவரிடம் கை குலுக்கி, ஒரு புகைப்படம் எடுத்து, நன்றி சொல்லி விடை பெற்றேன். அதன் பிறகு பிரபாவுக்கான புத்தக வேட்டையில் ஈடுபட்டு மீண்டும் தோல்வி அடைந்து கிளம்பினேன். தமிழினிக்கு சென்று சிவராமனிடமும் விடைபெற்று வீட்டுக்கு கிளம்பினேன்.



வெளியே வந்து பேருந்துக்கு நின்ற போது, சா கந்தசாமியும் வந்தார், அதிர்ஷ்டவசமாக அவரும் நான் ஏறிய அதே கூட்டமில்லாத பேருந்தில் ஏற, நான் இறங்கும் நிறுத்தம் வரை அவருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு இறங்கினேன்.

இன்று வாங்கியவை

புதுமைப்பித்தன் கதைகள் (தொகுதி 3,4,5) - செண்பகா - Rs 125
வால்கள் - Books for children - Rs 14

நடைபாதைக் கடையில், ஒவ்வொன்றும் பத்தே ரூபாய்
ஜீவஜோதி - எம்வி வெங்கட்ராம்
எஸ்தர் - வண்ணநிலவன்
கற்பக விருட்சம் - கு அழகிரிசாமி

பின்குறிப்பு
பதிவர்கள் யாரும் சிக்காததால், இன்று சித்து மற்றும் சங்கர் படமே வெளியிடப்படுகிறது

நண்பர் ஜெட்லி வேண்டுகோளுக்கிணங்க (பாதுகாப்பு காரணங்களுக்காக) அவருடைய படம் வெளியிடப்படவில்லை.

Sunday, January 3, 2010

புத்தகத்திருவிழா 2010 - நாள் 4




"மேய போற மாட்டுக்கு கொம்புல வைக்கோல்"ன்னு எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க, அதே மாதிரி புத்தக கண்காட்சிக்கு போகும்போதே நண்பன் நடராஜுக்கு கொடுக்குறதுக்காக, கிமு கிபி, மனிதனுக்குள் மிருகம் (ரெண்டும் மதன்), இலைகளை வியக்கும் மரம் (எஸ்ரா) என்று எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு கிளம்பினேன். முதலில் நுங்கம்பாக்கத்தில் பார்க்கலாம்ன்னு சொல்லி, அப்புறம் அது சேத்துபட்டுன்னு மாறி கடைசியில், பீச் ஸ்டேஷனில் போய் அவனை அழைத்துக்கொண்டு வந்தேன். புத்தகம் வாங்க போகிற ஆர்வத்தில், அடுத்து வந்த சிக்னலில், சிகப்பை கவனிக்காமல் சென்று, போக்குவரத்துக் காவலரிடம் பொன்மொழி ஒன்றை பெற்றுக்கொண்டு சென்றோம் (நல்ல வேளை துரத்திப் பிடிக்கல).




நூறடி அகலத்துல ரோடு போடுறாங்களோ இல்லியோ, நூறடிக்கு ஒரு சிக்னல் வச்சிருக்காங்க, ஒரு வழியா நாலு மணியோட வந்து சேர்ந்தோம். முந்தாநேத்து பதினஞ்சு, நேத்து பத்து, இன்னிக்கு அஞ்சு. பார்கிங் கட்டணத்தைத்தான் சொல்றேன், ஒண்ணும் புரியல. வண்டிய நிறுத்திட்டு நடந்து வந்தா, பக்கத்துல பிரபல எழுத்தாளர் வராருன்னு எல்லாரும் வழி விட்டு ஒதுங்குனாங்க. யாருன்னு பார்த்தா நம்ம நர்சிம். (அது எப்புடி எப்பவுமே ஸ்மார்டா இருக்கீங்க?). நேர போய் ஒரு ரெண்டு நிமிஷம் பேசினேன். அப்புறம் அவரோட பொன்னான நேரத்த வீணாக்க வேண்டாமேன்னு, கைகுலுக்கிட்டு உயிர்மை அரங்கில் சந்திக்கலாம்னு விடைபெற்றோம்.  இன்னிக்கு நல்லாவே கூட்டம் இருந்தது. ஆனாலும் ரெண்டு கவுண்டர்ல தான் டிக்கெட் குடுக்குறாங்க. மூணு நாளா வாங்க வேண்டிய புத்தக பட்டியல் தெளிவா இருந்ததால் குறிப்பிட்ட அரங்கங்களுக்கு மட்டும் போய் வந்ததால், இன்னிக்கு ஒவ்வொரு வரிசையா பார்க்கலாம்னு முடிவு பண்ணினோம்.



நடராஜ் முதல் அரங்கிலேயே  மதனின் வந்தார்கள் வென்றார்கள் (விகடன் - Rs 135) வாங்கினான். அப்புறம் இருந்த வரிசைகளில் ஒன்றும் தேறவில்லை. ஞாநியின் தீவிர வாசகனான நண்பனுக்கு அவர் அரங்கில் இல்லாதது ஏமாற்றமளித்தது. இன்னும் இரண்டு வரிசைகள் சுற்றி முடிக்க மணி ஐந்தானது, நேரே உயிர்மை அரங்கம் நோக்கி சென்றோம், வழியில் யாரோ அழைப்பது போல் தோன்ற, பார்த்தால், தண்டோரா, கேபிள், அத்திரி மற்றும் பொன்.வாசு. அவர்களையும் அழைத்துக்கொண்டு உயிர்மை செல்ல, அரங்க வாசலில் சாருவும், எஸ்ராவும் வாசகர்கள் சூழ நின்று கொண்டிருந்தார்கள், அரங்கினுள்ளே இன்னுமொரு வாசகச் சுழல் தெரிந்தது, அகப்பட்டிருப்பது யாரென்று பார்த்தால், மீண்டும் நர்சிம். எஸ்ராவையும் சாருவையும் எளிதாய் படமெடுக்க முடிந்த என்னால் நர்சிமை கடைசிவரை பிடிக்கவே முடியவில்லை.




இதற்கிடையே சாருவுக்கு தேநீர் வந்தது, அவரோ அன்புடன் அதை அத்திரிக்கு கொடுக்க, பாச மழையில் திக்குமுக்காடிப்போனார் அத்திரி. தேநீருடன் பேசிக்கொண்டிருந்த போது அவரும் எங்க ஊர்க்காரர் என்று தெரிந்தது (அவரு ஊர் அம்பாசமுத்திரத்துக்கு மேற்கே ஏழு கிமீ, எங்க ஊரு வடக்கே ஏழு கிமீ). கொஞ்சம் ஊர்க்கதை பேசிவிட்டு விஜயா பதிப்பகம் சென்றோம்.


அங்கே நடராஜ் உபபாண்டவம் (விஜயா - Rs 200) வாங்கினான். உயிர்மைக்கு திரும்பி வந்து எஸ்ராவிடம் ஒரு கையெழுத்து வாங்கிக்கொண்டு, இந்த வருட புத்தகப்பட்டியல் அவருடைய உபயம் என்பதால் ஒரு நன்றியும் சொல்லிவிட்டு விடை பெற்றோம்.


நண்பனுக்கு வேறு வேலைகள் இருந்ததால் அவன் கிளம்பிவிட, அப்போது வந்து சேர்ந்த என் தங்கைக்கும் தோழிக்கும், அவர்கள் வாங்க வேண்டிய அரங்கங்கள் இருக்குமிடத்தை சொல்லிவிட்டு நான் சுற்ற ஆரம்பித்தேன்.



இன்று வாங்கிய புத்தகங்கள்,

தலைவர் பரிந்துரை, 

காந்தியும் புலிக்கலைஞனும் 
- அசோகமித்திரன் - கவிதா - Rs 80
வாசவேச்வரம் - கிருத்திகா - காலச்சுவடு - Rs 140
பொய்த்தேவு - கநாசு - காலச்சுவடு - Rs 150

நேற்று பதிவிலிட்ட அலைபேசி எண்ணைப் பார்த்து அழைத்துப் பேசிய அண்ணன் பிரபாகரின் பரிந்துரை

கரையெல்லாம் செண்பகப்பூ - சுஜாதா - விசா - Rs 77
மீண்டும் ஜீனோ - சுஜாதா - விசா - Rs 115

கண்ணில் பட்டதால்,

ரப்பர் - ஜெயமோகன் - கவிதா - Rs 75
சுண்ணாம்பு கேட்ட இசக்கி - அ.கா.பெருமாள் - தமிழினி - Rs 85
குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட் (தமிழில் திஜர) - காலச்சுவடு - Rs 125

நீண்டநேரம் தேடி, "மதினிமார் கதை", அன்னம் வெளியீடு என்பதை கண்டுபிடித்தேன். (வீடு வந்து சேர்ந்து, மின்னஞ்சலை திறந்து பார்த்தால்,  கார்த்திகை பாண்டியன் தகவல்களை அனுப்பிருந்தார், நன்றி அண்ணே) ஆனால், புத்தகம் இருப்பில் இல்லை என்றும், அடுத்த பதிப்பு வருமா என்று தெரியாது என்றும் பதில் வந்ததை, தமிழினியில் சந்தித்த சிவராமனிடம் சொல்ல, அவர், தனது வீட்டிலிருந்து நாளை கொண்டுவந்து தருவதாக கூறியுள்ளார். ஒரே ஒரு நிபந்தனை, படித்துவிட்டு புத்தகத்தைப் பற்றி பதிவிட வேண்டும் என்றார். நிச்சயம் செய்துவிடலாம். அவருடன் சுரேஷ்கண்ணனும் இருந்தார். அவர்கள் இருவருடனும் கொஞ்ச நேரம் சுற்றி விட்டு நாளை மீண்டும் வருவதாய் சொல்லி விடைபெற்றேன்.

இன்று கண்ணை உறுத்திய புத்தகங்கள்
என் சரிதம் - உவேசா - Rs 300
தமிழில் பிழையில்லாமல் எழுத ஒரு வழிகாட்டி - அரங்கு எண் 60-80ல்  எங்கோ பார்த்தேன், தேட வேண்டும்.

பின்குறிப்பு :

பிரபா கேட்ட, "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" எங்கு தேடியும் கிடைக்கவில்லை. யார் கண்ணிலாவது பட்டால் சொல்லவும்.

புதுமைப்பித்தன் சிறுகதைகளின் முழுத் தொகுப்பு

காலச்சுவடு -  Rs 450
சந்தியா பதிப்பகம் - Rs 350
மணிவாசகர் - Rs 200 (2 தொகுதிகள்)
செண்பகா - Rs 200 (5 தொகுதிகள்)

யோசித்து முடிவு செய்யவும்

ஞாயிறும் செல்வேன், இணைந்து கொள்ள விரும்புவோர், தொடர்பு கொள்க, 9884088078

நன்றி
சங்கர்

Saturday, January 2, 2010

புத்தகத்திருவிழா 2010 - நாள் 2 & 3 (கொஞ்சம் நீளமான பதிவு, மன்னிக்கவும்)

நாள் 2 (31-12-2009)



"அஹோ கேளும் பிள்ளாய், இந்த பதிவை படிக்கும் மானுடரே", ஒண்ணுமில்லீங்க, புத்தகக்காட்சியில் வாங்கிட்டு வந்த விக்கிரமாதித்தன் கதையை கொஞ்சம் புரட்டிப் பார்த்தேன் அதுதான். நேத்து நம்ம ஜெட்லியும் வரேன்னு சொல்லியிருந்தாரு. அவரு ரெண்டுமணிக்கு சந்தையில இருப்பேன்னு சொன்னதால், நான் ரெண்டுமணிக்கு தான் வீட்ட விட்டே கிளம்பினேன் . முதல் நாள் மாதிரி ஊர்சுற்றி போகாம, அரைமணி நேரத்துல போய் சேர்ந்தேன். ஜெட்லி ஏற்கனவே அங்கு காத்திருந்தார். அவரது ரிப்போர்ட் இதோ (ஒரு துணைப்பதிவு)


புத்தக கண்காட்சியில் கொள்ளை கும்பல்....

நான் திங்கள்க்கிழமை போகலாம் என்று இருந்தேன் ஆனால் அந்த பக்கம் வேலை இருந்ததால் அப்படியே ஒரு எட்டு பார்த்துவிட்டு ரொம்ப நாளாக
வாங்க வேண்டும் என்று எண்ணிய புத்தகத்தை மட்டும் முதலில் வாங்கி விடுவோம் என்று 1.50 க்கு உள்ளே நுழைந்தேன்.











முதலிலே அதிர்ச்சி காத்து இருந்தது பைக் பார்க்கிங் டோக்கன் 15 ரூபாய் என்று கண்ணுக்கு கையுக்கும் அகப்படாத சீட்டில் தந்தார்கள். ரெண்டு மணிக்கு சில நிமிடங்களுக்கு முன்சென்று விட்டதால்,நுழைவுச்சீட்டு கவுன்டரில் நீண்ட வரிசை காத்திருந்தது. பத்து நிமிடம் கழித்து நான் வரிசையில் இருந்த கவுன்டரில் டிக்கெட் தர ஆள் வரவில்லை அதனால் எங்களை வேறு கவுன்டருக்கு செல்லுமாறு சொன்னார்கள். அடுத்த கவுன்டருக்குபோகும் போது இன்னும் முழுவதாக வேலை முடியாமல் கிழே கிடந்த கம்பி பெரியவர் காலில் பட்டு தோல் கீறி ரத்தம் எட்டிப்பார்த்தது....


நான் கொள்ளை கும்பல் என்று கூறியது பார்க்கிங் டோக்கனைபற்றி தான்..
நண்பர் சங்கர் சிறிது நேரம் கழித்து தான் கண்காட்சிக்கு வந்திருந்தார்
அப்போது நான் அவரிடம் 15 ரூபாய் பார்க்கிங் கட்டணம்அதிகம் என்றேன்.
அதற்கு அவர் 10 ரூபாய் தான் என்றார்.நாங்கள் இதை பற்றி கண்காட்சி அலுவலகத்தில் விசாரித்தோம் அவர்கள் அதை பற்றியெல்லாம் எங்களுக்கு தெரியாது என்றார்கள்.

பின்பு நான் வெளியே போகும் போது டோக்கன் கேட்ட பையனிடம்
எவ்ளோ என்று கேட்டேன் பத்து ரூபாய் என்றான் அப்போ ஏன்
வரும்போது 15 வாங்குனிங்க என்று கேட்டேன்...அவன் "நாங்களா..
பத்து ரூபாய் தான் வாங்குறோம்" என்றான் வாயில் பாக்குடன்.
பின்பு இன்னொருவனை கை நீட்டினான் அவன்"காண்ட்ராக்ட் ரேட்
அதிகம்" என்றான்.சண்டை போடாத குறையாக திரும்ப ஐந்து
ரூபாயை வாங்கிவந்தேன்.....

நாட்டுல என்ன நடக்குதுன்னு புரியல... குடிக்கறவன் கிட்ட இருந்தும்
எக்ஸ்ட்ரா துட்டு வாங்குறாங்க...புக் படிக்கிறவன்கிட்ட இருந்தும்
எக்ஸ்ட்ரா
துட்டு வாங்குறாங்க...

ஒரே சந்தோசம் நான் நீண்ட நாட்களாக வாங்க நினைத்த
புத்தகங்களை வாங்கிவிட்டேன்...அப்புறம் பொன்.வாசுதேவன்
மற்றும் தண்டோரா அண்ணனை சந்தித்தோம்...


பேக் டு சங்கர்

முதலில் பரிசல் ஸ்டாலுக்கு போனோம், அங்க நம்ம அகநாழிகை வாசு சார் இருந்தாரு, நம்ம தண்டோரா அண்ணனும் வந்து சேர்ந்தார். வாசு சார், பா ராஜாராமின் "கருவேல நிழல்" தொகுப்பை அன்பளித்தார். ஒரு சின்ன பதிவர் சந்திப்பை நடத்திவிட்டு ஒரு போட்டோ கூட எடுக்காம விடைபெற்றோம். ஜெட்லி நேரமாகுதுன்னு சொல்லி வீட்டுக்கு கிளம்பினார். நான் கடை கடையா சுத்த ஆரம்பிச்சேன்.



காலச்சுவடு ஸ்டாலுக்கு போனா, ஒரு அதிர்ச்சி, முதல் நாள் நான் 450 ரூபாய்க்கு வாங்கியிருந்த "கு.பெ.ஆ" 290 ரூபாய்க்கும், 575 ரூபாய்க்கு வாங்கின "சுரா சிறுகதைகள்" 450 ரூபாய்க்கும் போட்டிருந்தாங்க, ஒண்ணு வாங்கினா இன்னொன்னு அன்பளிப்பாம். கேட்டா பழைய பதிப்புன்னு சொன்னங்க. 'அடடா, வட போச்சே'ன்னு நினைச்சிக்கிட்டே, மீனாட்சி புத்தக நிலையதுக்குள்ள கால் எடுத்து வச்சேன், அப்பிடியே உள்ள போயிடுச்சு, பாத்தா அரையடி ஆழத்துக்கு பள்ளம்.

அப்புறம் ஒரு மூணு மணிநேரம் சுத்தி வந்து வாங்கின புத்தகங்கள்,

விக்ரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன் - பிரேமா பிரசுரம் - Rs 85
நடந்தது நடந்தபடியே - தேவன் - அல்லயன்ஸ் - Rs 55
பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன் - மணிவாசகர் - Rs 65 (காலச்சுவடு - Rs 225 )
புதுமைபித்தன் கட்டுரைகள் - மணிவாசகர் - Rs 40
வேள்வித்தீ - எம்வி வெங்கட்ராம் - மணிவாசகர் - Rs 20
நித்யகன்னி - எம்வி வெங்கட்ராம் - காலச்சுவடு - Rs 100
புலிநகக் கொன்றை - பிஎ கிருஷ்ணன் - காலச்சுவடு - Rs 145
உள்ளேயிருந்து சில குரல்கள் - கோபி கிருஷ்ணன் - வம்சி - Rs 60
கிருஷ்ணப் பருந்து - ஆ மாதவன் - தமிழினி (யுனைடெட் ரைட்டர்ஸ்) - Rs 65
சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் - மீனாட்சி புத்தக நிலையம் - Rs 140
அம்மா வந்தாள் - தி.ஜா - ஐந்திணை - Rs 90
என் பெயர் ராம சேஷன் - ஆதவன் - உயிர்மை - Rs 120
துப்பறியும் சாம்பு - தேவன் - உயிர்மை - Rs 300
ஸ்ரீ ரங்கத்து கதைகள் - உயிர்மை - Rs 200
மறைவாய் சொன்ன கதைகள் - கி.ரா & கழனியூரன் - உயிர்மை - Rs 230
சுஜாதா நினைவுப் புனைவு 2009 - சுஜாதா நினைவு விஞ்ஞானகதை போட்டி தொகுப்பு - ஆழி - Rs 45

இதுக்கு மேல நடக்க முடியாதுங்கிற நிலைமை வந்ததுக்கபுறம் (ஆறரை மணிக்கு) வீட்டுக்கு கிளம்பினேன். வருபோது ஒழுங்கா வந்திட்டேனே, அது தப்பாசேன்னு நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையை இரண்டு தடவை வலம் வந்து வீடு வந்து சேர்ந்தேன்.

நாள் 3 (01-01-2010)





நண்பன் பிரவீனோட, நாலரை மணிக்கு, நங்கநல்லூரிலிருந்து கிளம்பினேன் ('ந'னாவுக்கு, 'நா'னாவுக்கு, 'ந'னா. கவித, கவித). நாலு கவுண்டர் இருந்தாலும் ஒண்ணுலதான் டிக்கெட் குடுத்தாங்க. அலைமோதின கூட்டத்தில் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தோம். நண்பன் கணினி சம்பந்தப்பட்ட புத்தகங்கள் வாங்கணும்னு சொன்னதால், அவனுக்கு வழி சொல்லி அனுப்பிவிட்டு நேரே உயிர்மை ஸ்டால் சென்றேன். அங்கே பதிவர்கள் ஜ்யோவ்ராம் சுந்தரையும், பைத்தியக்காரனையும் பார்த்தேன்.




அவர்கள் இருவரும் தீவிரமான இலக்கிய விவாதத்தில் ஈடுபடத் தொடங்கியதால் நடையைக் கட்டினேன். காணமல் போன நண்பனை தேடிச்சென்றபோது, மனுஷ்யபுத்திரன் ஓரிடத்தில் பார்த்தேன்.



நண்பனை பார்த்துவிட்டு திரும்பி வந்து உயிர்மை சந்தா கட்டிகொண்டிருந்த போது, சாரு வந்தார். ஜ்யோவ்ராம் சுந்தர் தான் வாங்கிய புத்தகங்களில் சாருவிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார். நானும் ஒரு ஜெயமோகன் புத்தகம் வாங்கி அவரிடம் கையெழுத்து வாங்கலாமென்று நினைத்தேன் அப்புறம் அவர் அதை கிழித்துப்போட்டு விட்டால் என்ன செய்வது என்று நினைத்து, வெறுமனே கை குலுக்கினேன். "இதற்கு 750 ரூபாய் கேட்க மாட்டீர்களே" என்று உறுதி படுத்திக்கொண்டு ஒரு புகைப்படம் எடுத்தேன்.



நண்பன் வேண்டிய புத்தகம் வாங்கிக்கொண்டு வர கிளம்பினோம். நான் என்ன வாங்கினேன் என்று கேட்கிறீர்களா, (கேட்கவிட்டாலும் சொல்லுவேன்). தமிழினி, அன்னை புத்தகாலயம், அம்ருதா, விகடன் ஆகிய ஸ்டால்களில் விலைப்பட்டியல் வாங்கினேன். இன்னும் மூன்று முறையாவது செல்ல எண்ணியிருப்பதால், இன்று லீவ் விட்டுவிட்டேன்.



பின்குறிப்பு :

கோணங்கியின் "மதினிமார் கதை" புத்தகம் கிடைக்கவில்லை. எந்த பதிப்பக வெளியீடு என்று யாராவது சொன்னால் சந்தோஷம்.

அரங்குகளின் அகரவரிசை பட்டியல் கண்காட்சி அலுவலகத்தில் கிடைக்கிறது. வாங்கி பயன்பெறவும்.

இந்தவார குமுதத்தின் 'ஓ பக்கங்களை' கொடுத்தால் 30 % தள்ளுபடி தருகிறார் ஞாநி.

நான் சனிக்கிழமையும் செல்லலாம் என்றிருக்கிறேன், இணைந்துகொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.9884088078


நன்றி
சங்கர்

Friday, January 1, 2010

கில்மானந்தாவின் புது வருட சிந்தனைகள்!!

கில்மானந்தாவின் புது வருட சிந்தனைகள்!!

நம் ப்ளாக்கர்கள் நலம் காத்திட என் குரு கில்மானந்தாவிடம்
புத்தாண்டு ஆசி வாங்க சென்றேன்.அப்போது அவர் வெட்டியாக


இருந்ததால் நம் நன்மைக்காக சில சொற்பொழிவை ஆற்றினார்
அது உங்கள் பார்வைக்கு இப்பொழுது.....

கில்மானந்தா: "ஜெட்லி நீ என் புகழை பரப்புவதில் எனக்கு மிக்க
மகிழ்ச்சி...ஆனால் நீ அதற்காக அமௌன்ட் கேப்பதெல்லாம்
அதிகம்ப்பா"...


ஜெட்லி : "சரி சரி உங்க உரையை ஆரம்பிங்க...."



***********************************

யதார்த்தம் என்றால் என்ன??

யதார்த்தம், நாம் இதை எங்கு போனாலும் தேடுகிறோம்.
ஒரு பக்கா மசாலா படத்தை,பதார்த்தம் தின்னுட்டே பார்த்துட்டு
அதில் யதார்த்தம் இல்லை என்று குறை சொல்கிறோம்.
எது யதார்த்தம் என்பதை அலசுவோம்...வாருங்கள்...

பல பேர் விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தை ரொம்ப
எதிர்ப்பார்த்து ஏமாந்து விட்டார்கள்...விஜய் கிட்ட இருந்து யதார்த்த சினிமா எதிர்ப்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்...அதான் அவரே
திருமலை படத்தில் சொன்னாரே வாழ்க்கை ஒரு வட்டம்னு....
அதுல அவரு சிக்கிட்டாரு...............!!

*****************************************

எது உண்மையான நட்பு:


பிட்டு ஒரு அட்டு என்றாலும் நம்மில் பலபேர் காலையில் பிட்டு(புட்டு) சாப்பிட்டு கொண்டே பிட்டு பார்க்கிறோம் என்பது தான் யதார்த்தம்....இதை தான் நான்...

பிட்டுசி.டி கொடுக்காதார் நட்பு அரைநட்பு
அந்நட்பை உடனே கட் செய்தல் நன்று....

விளக்கம்:

ஆபத்து காலத்தில் நமக்கு பிட் படம் தராதவன் நட்பை
உடனே கட் செய்வது சால சிறந்தது...
**************************************
மற்றவர்களுக்காகவும் வேண்டுங்கள்:


கங்கண சூரிய கிரகம்.

வரும் ஜனவரி மாட்டு பொங்கல் அன்று கங்கண சூரிய கிரகத்தை நாம் வெறும் கண்ணால் காணலாம் ஆனால்...இதற்கும் நம் தாம்தூம்படத்தில் நடித்த கங்கனா ரனௌத்க்கும் எந்த தொடர்பும் இல்லை....கங்கனா ரனௌத்க்கு ஒன்றும் சொல்லி கொள்கிற மாதிரி பெரிதாய் (வாய்ப்பு)இல்லை என்றாலும் இந்த 2010 இல் அவருக்கு கடவுள் அருள் கிடைக்க நாம் ப்ராத்தனை செய்வோம்....!!


"ஹோ...கில்மா ஜே ரவ" என்ற மந்திரத்தை இந்த தருணத்தில் இரண்டு தடவை கூறவும்...

****************************

வாழ்க்கை தத்துவம்:

பஸ் ஸ்டாப்பில் பஸ் நிக்கறது இல்லைனாலும் அதை நாம
பஸ் ஸ்டாப் என்று தான் சொல்றோம் அது போல் தான்
நம்ம வழுக்கையும் சாரி வாழ்க்கையும்....நான் என்ன சொல்ல
வரேன்னா பஸ் எங்கே நிக்குதோ அங்க போய் ஏறுங்கனு சொல்றேன்!!

********************************

உலகத்திலே பெரிய வலி:


காதலியை பிரியும் போது வரும் வலியா?? இல்லை நட்பை இழக்கும் போது வரும் வலியா?? இல்லை மொக்கை படம் பார்க்கும் போது வரும் வலியா?? இல்லை சரக்கு அடிச்சுட்டு வாந்தி எடுத்தா நம்ம நண்பர்கள் கிண்டல் செய்வார்களே அது தான் பெரிய வலி.காலத்தாலும் அழியாத வலி....சரக்கு ஓவர்ஆக அடிச்சா வாந்தி வரும் அது தான் காலத்தின் கட்டாயம் இதை தெரியாமல் நண்பர்கள் கேலிக்கு ஆளாகுபவர்கள்நெஞ்சில் மிக பெரிய வலியாக இந்த ஆப்பாயில் இருக்கும்.!!


ராவா ஆயினும் நாகாக்க அளவு தெரியாமல்


குடித்தால் அது ஆப்பாயில் ஆக வரும்....

மற்றும்...


சரக்கை பெருங்கடல் என நீந்துவர் நீந்தாதார்
வீடு போய் சேரமாட்டார்....


******************************************

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
இந்த புத்தாண்டில் மப்பும் டப்பும் செழிக்க அடியேனின்
வாழ்த்துக்கள்......."ஹோ...கில்மா ஜே ரவ"


இந்த சிந்தனைகள் பல பேரை சேர ஒட்டு போடுங்கள்...
முடிஞ்சா பின்னூட்டம் போட்டுட்டு போங்க.....

உங்கள்
ஜெட்லி சரண்....