நான்கு நாட்கள் தினமும் எழுபது கிமீ பைக் ஓட்டியதால், லேசாக முதுகு வலிப்பது போல் தோன்றியதால், இன்று ட்ரெயினில் செல்ல முடிவு செய்தேன். மூன்று மணிக்கு சந்திப்பதாய் சொல்லிவிட்டு இரண்டரைக்கு தான் வீட்டை விட்டே கிளம்பினேன். மூன்றரை மணிக்கு சேத்துப்பட்டு ஸ்டேஷனில் இறங்கி வெளியில் வந்தால், சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்தவுடன் நாமும் கலந்து கொள்ளலாம் என்று ஆசை வந்தது, ஆனால் அவர்கள் பீல்டிங் செய்யும் முறையை பார்த்தவுடன், நாளைக்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்பது நினைவுக்கு வர, பேசாமல் நடையைக் கட்டினேன்.
ஈகா அருகே பஸ் பிடித்து பச்சையப்பன் கல்லூரியில் இறங்கினேன், இறங்குமிடத்தில் நடைபாதையில் கடைகள் போட்டிருந்தார்கள், கடந்த நாட்களில், வண்டியில் வந்து, நேரே உள்ளே சென்று விடுவதால், பார்க்க முடியவில்லை. இன்று புரட்டி புரட்டித் தேடியதில் பத்து ரூபாய்க்கு சில முத்துக்கள் கிடைத்தன, அவற்றில் ஒன்று, நேற்று நூற்றிநாற்பது ரூபாய்க்கு வாங்கிய
பொய்த்தேவு 
. பிற முத்துக்கள் கீழே.
உள்ளே சென்ற போது ஏற்கனவே வந்து வாங்கி முடித்துவிட்ட நண்பர்கள், ஜெட்லி, சித்து மற்று நடராஜ், அரங்க நுழைவாயிலிலேயே காத்திருந்தனர், ஏற்கனவே அவர்கள் டிக்கெட் எடுத்திருந்ததால் நீண்ட வரிசையிலிருந்து தப்பினேன்.
உள்ளே போய், நேரே தமிழினிக்குச் சென்று சிவராமனிடம் மதினிமார்கள் கதை புத்தகத்தை வாங்கிக் கொண்டு சுற்ற தொடங்கினோம், உயிர்மையையும் காலச்சுவடையும் சுற்றிச்சுற்றி வந்த போதும், பதிவர்கள் யாரும் கண்ணில்படவில்லை. நானும் மீண்டும் மீண்டும் மொக்கை வாங்குவதை பொருட்படுத்தாமல், கொஞ்சம் சந்தேகப்படும்படியான தோற்றத்தில் இருப்பவர்களிடமெல்லாம் சென்று "நீங்க ப்ளாக் எழுதுறீங்களா?" என்று கேட்டுக்கொண்டிருந்தேன். நண்பர்கள் அவர்கள் பங்குக்கு, "டேய் சங்கர், அவரு போன்ல ஏதோ 'ப்ளாக்'னு பேசுறாரு, இவரு போட்டோ எடுக்குராருன்னு" சொல்லி நொண்டி விட்டுக்கிட்டிருந்தங்க. இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால், யாரும் "ப்ளாக்'னா என்ன?" என்று கேட்கவில்லை. "படிப்பேன், எழுதுவதில்லை" என்று தான் பலரும் சொன்னார்கள்.
இன்னும் கொஞ்சம் நேரம் சுற்றி விட்டு நண்பர்கள் கிளம்ப தொடங்கினார்கள். நானும் வெளியே வந்து பேசிக்கொண்டே நடந்தேன், வழியில் அப்போதும் ஏதோ வேளை செய்து கொண்டிருந்தார்கள், அதை பார்த்துவிட்டு நண்பர் ஜெட்லி கேட்ட கேள்வி "அடுத்த சனிக்கிழமைக்கு முன்னாடியாவது முடிச்சிடுவாங்களா?". அங்கே நின்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் குறித்த ஜெட்லியின் ரிப்போர்ட் இதோ.
புத்தக கண்காட்சியில் பதிவர் சங்கருக்கு மூக்குடைப்பு
நான் புத்தக கண்காட்சிக்கு திங்கள்கிழமை போலாம் என்றிருந்தேன் ஆனால் நண்பர்கள் அழைத்தால், இன்று சென்று இருந்தேன்.முன்னமே நான் சென்றதால் அப்படியே பராக்கு பார்த்து கொண்டிருந்தேன் பின்பு சித்து,நட்டு, சங்கர் அனைவரும் வந்து சேர்ந்தனர்..அதற்கு பின்பும் நான் பராக்கு தான் பார்த்து கொண்டிருந்தேன்.காரணம், நாளைக்கு எப்படியும் வர போறோம் ஏன் கூட்ட நெரிசல்ல சிக்கிக்கிட்டு.
சங்கருக்கு ப்ளாக்-ஒ-மேனியா வந்துவிட்டது காரணம் யாரை
பார்த்தாலும் அவருக்கு பதிவர் போல் தெரிவதாக கூறினார்.
எனக்கும் இது போல் முன்னாடி இருந்தது ஆனால் இப்போது
இல்லை....யாராவது ஒருத்தர் சும்மா நின்னா போதும் உடனே
அவரிடம் சங்கர் போய் "நீங்க பதிவரா" என்று கேட்டு விட்டு தான்
மறுவேலை பார்க்கிறார்.
மேட்டர் எதுவும் கிடைக்காமல் பள்ளி நுழைவாயில் பைக் பார்க்கிங்
பக்கத்தில் செம டிராபிக்இல் நின்று கொண்டு ஏதாவது பதிவர் சிக்குவாரா என்று பார்த்து கொண்டிருந்த வேளையில் தான் அந்த கொடூர சம்பவம் நடந்தது...மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள்....
சங்கர் அவர்களை நோக்கி வாயில் பாக்கை மென்றபடி ஒருவன் வந்தான். அந்த மர்ம மனிதன் போட்டிருந்த உடையே கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அருகில் வந்த அந்த மர்மமனிதன் சங்கரிடம்
"எப்படிங்க உள்ளே போகணும்?" என்றான்.
"நேரா போங்க" என்று சங்கர் இடது புறம் கை காட்டினார்.
"இங்கே மாதிரி கூட்டமாதான் அங்கேயும் இருக்குமா?" என்றான்
"ஆமாங்க, இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை, கொஞ்சம் கூட்டம் இருக்கும்" என எக்ஸ்ட்ரா தகவல் தந்தார் சங்கர்.
"ரொம்ப தூரமா?" என்று மறுபடியும் கேட்டான்.
"இல்ல பக்கத்தில் தான்,அந்த காரை தாண்டியவுடன் கவுண்டர் இருக்கும்" என்றார் சங்கர்.
"டிக்கெட் எடுக்கணுமா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டான் அந்த மர்மமனிதன்....
"அஞ்சு ரூபாய்தான்...கடைசி கவுண்டர் போனா கூட்டம் இருக்காது" என்றார் சங்கர்
"உள்ளே புத்தகம் எல்லாம் எப்படி இருக்கும், அடுக்கி வச்சிருப்பாங்களா?" என்று ஒரு அற்புதமான கேள்வியைக் கேட்டான்,
அதற்கு சங்கர் சொன்னதை காதில் வாங்காமல், அந்த மர்மமனிதன் பூந்தமல்லி நெடுஞ்சாலையை நோக்கி நடந்து கொண்டிருந்தான்...இதை விட மூக்குடைப்பு வேறு வேண்டுமா...
பேக் டு சங்கர்
நண்பர்களுக்கு விடை தந்து அனுப்பி, பின் மீண்டும் உள்ளே நுழைந்தேன், சந்தியா பதிப்பக ஸ்டாலில் நுழைந்தபோது, இன்ப அதிர்ச்சியாக அங்கே சா.கந்தசாமி புத்தகங்கள் தேடிக்கொண்டிருந்தார். அவரிடம் கை குலுக்கி, ஒரு புகைப்படம் எடுத்து, நன்றி சொல்லி விடை பெற்றேன். அதன் பிறகு பிரபாவுக்கான புத்தக வேட்டையில் ஈடுபட்டு மீண்டும் தோல்வி அடைந்து கிளம்பினேன். தமிழினிக்கு சென்று சிவராமனிடமும் விடைபெற்று வீட்டுக்கு கிளம்பினேன்.
வெளியே வந்து பேருந்துக்கு நின்ற போது, சா கந்தசாமியும் வந்தார், அதிர்ஷ்டவசமாக அவரும் நான் ஏறிய அதே கூட்டமில்லாத பேருந்தில் ஏற, நான் இறங்கும் நிறுத்தம் வரை அவருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு இறங்கினேன்.
இன்று வாங்கியவை
புதுமைப்பித்தன் கதைகள் (தொகுதி 3,4,5) - செண்பகா - Rs 125
வால்கள் - Books for children - Rs 14
நடைபாதைக் கடையில், ஒவ்வொன்றும் பத்தே ரூபாய்
ஜீவஜோதி - எம்வி வெங்கட்ராம்
எஸ்தர் - வண்ணநிலவன்
கற்பக விருட்சம் - கு அழகிரிசாமி
பின்குறிப்பு
பதிவர்கள் யாரும் சிக்காததால், இன்று சித்து மற்றும் சங்கர் படமே வெளியிடப்படுகிறது
நண்பர் ஜெட்லி வேண்டுகோளுக்கிணங்க (பாதுகாப்பு காரணங்களுக்காக) அவருடைய படம் வெளியிடப்படவில்லை.