கடந்த வாரம் ரெண்டாம் தேதி அடையாறை சேர்ந்த மஞ்சித் சிங் அவர்களின் குடும்பத்துக்கும் மற்றும் நண்பர்களுக்கும் ஓர் அதிர்ச்சியான செய்தி, அது பெசன்ட் நகரில் ஆல்காட் பள்ளி அருகே கொஞ்சம் ரோட்டின் நடுவே இருக்கும் மரத்தில் மோதி அவர்களது மகன் பவித் சிங் இறந்து விட்டார் என்பதே....
இருபத்தொரு வயதான இளைஞர் பவித் சிங்கின் மரணம் அவரது
குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.ஆனால் பவித்சிங்கின்
குடும்பத்தினரும் நண்பர்களும் சோகத்திலும் மனம் தளராமல் தங்கள் மகன் ,நண்பன் மற்றவர்களுக்கு ஒரு செய்தியை விட்டு சென்றுள்ளார் என்று அதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை நேற்று நடத்தினார்கள். பவித்சிங் விட்டு சென்ற செய்தி "சீட் பெல்ட் அணிந்து கார் ஒட்டவும்" WEAR A SEATBELT !!
__________________________________________________
நேற்று பெசன்ட் நகரில் பவித்சிங் சீட் பெல்ட் விழிப்புணர்வு பிரசாரத்தில் அடையார் காவல் நிலைய டி.சி. செந்தாமரை கண்ணன்
அவர்கள் கலந்து கொண்டு பவித்சிங் படத்துக்கு மெழுகுவர்த்தி
ஏற்றி வைத்து காரில் வருவோருக்கு சீட் பெல்ட் அணிவதின்
அவசியத்தை வலியுறுத்தினார்.மேலும் பல காவல்துறை அதிகாரிகள்
கலந்து கொண்டனர்.பவித்சிங்கின் நண்பர்கள் மற்றும் உறவினர்களும்
பொதுமக்களுக்கு துண்டு பிரச்சாரங்கள் மற்றும் காரில் ஸ்டிக்கர்
ஒட்டி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
___________________________________________
இதில் பாராட்டபட வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
மகன் இறந்த ஒரு வாரத்தில் இப்படி ஒரு விழிப்புணர்வு பிரசாரம்
வைத்து அதை பொதுமக்களுக்கு எடுத்து சென்றதுக்கு ஒரு ராயல்
சல்யுட்!! மேலும் அவர்கள் பவித்சிங் சாலை பாதுகாப்பு டிரஸ்ட்
ஏற்படுத்தி அதன் மூலம் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்ய போகிறார்கள் என்று நோட்டீஸ்சில்
போட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
****************************************************
அப்புறம் நான் நேற்று விழிப்புணர்வு பிரசாரத்துக்கு சென்றபோது அங்கே பந்தபஸ்துக்கு வந்த ஒரு கான்ஸ்டபில் கூறிய செய்தி என்னை அதிர்ச்சி அடைய வைக்கவில்லை என்றாலும் அவர் கூறியது உண்மையாக இருந்தால் அந்த விபத்துக்கும் மரணத்துக்கும் அந்த ஒற்றை மரம் மட்டும் காரணமல்ல என்பதை தவிர இங்கு வேறு எதுவும் பதிவு செய்ய விரும்பவில்லை.....
சரி அந்த ரோட்டின் நடுவே இருந்த மரத்தை என்ன பண்ணாங்க??
அந்த மரத்தை விபத்து நடந்த அடுத்த நாளே வெட்டி விட்டனர்.
ஒரு உயிர் போறதுக்கு முன்னாடியே வெட்டி இருக்கலாம்....
சமூக ஆர்வலர்களின் கருத்து என்னவென்று அறிய ஆசை...
காரணம் அடையாரில் பழமுதிர் நிலையம் முன்னே இருக்கும்
ஒரு மரத்தை பார்க்கிங்காக வெட்டினார்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அந்த மரம் பாதி வெட்டப்பட்ட நிலையிலே தான் உள்ளது....எதுவும் கேஸ் இருக்கா இல்லை திரும்பவும் அந்த மரம் வளர வாய்ப்பு இருக்கானு எனக்கு தெரியல....
நான் அதற்காக ரோட்டில் இடையுறாக நிற்கும் மரத்திற்கும்,
ரோட்டின் ஓரத்தில் சாய்ந்து விழ போகும் மரத்திற்கும் வக்காலத்து
வாங்கவில்லை. ஓரமாக இருக்கும் மரங்கள் அப்படியே இருக்கட்டும்
ஆனால் அதுவே விழும் நிலையில் இருந்தால் உயிர் பலிக்கு முன் உடனடியாக வெட்டுவது நல்லது தான்.சில பல மாதங்களுக்கு முன்
அசோக் நகரில் ஒரு உதவி இயக்குனர் மரம் விழுந்து பலியானதை
நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம் என்று நினைக்கிறேன்.
**************************************
மரணம் எப்போ வரும்னு யாராலும் சொல்லமுடியாது...வீட்டை
விட்டு வெளியே போனால் திரும்பி வீட்டுக்கு வருவதே இப்போதுள்ள
நடைமுறையில் பெரிய விஷயம்.....இதுக்கு டிராபிக் மற்றும்
அதிக போக்குவரத்து தான் காரணமா?? சத்தியமா இல்லை.
ரேஷ் டிரைவிங் தான் மிக முக்கிய காரணம்.ரேஷ் டிரைவிங்கால்
ஒழுங்கா போற அடுத்தவனையும் வண்டியை விட்டு ஏத்தி விடுகிறார்கள் என்பது தான் கொடுமை.....
இன்னைக்கு காலையில் கூட ஒரு நல்லவர் ப்ளஸ் வல்லவர்
காரில் செல்போன் பேசியப்படியே டிராபிக் போலீஸ் இருந்தும்
அவர் செய்கையை பார்க்காமல் போனில் பேசியப்படியே ஒரு
சைட் மட்டும் பார்த்த கொண்டு முன்னேறி வந்ததை என்னனு
சொல்றது.....இந்த அல்லு கிளம்ப காரணம் அவர் பாக்காத சைடில் நானில்லை பைக்கில் ரைட் எடுக்க நின்னுக்கிட்டு இருந்தேன்...!!
இதனால சொல்ல வரது என்னன்னா காரில் போறவங்க சீட்
பெல்ட்டை போடுங்க, பைக்கில் போறவங்க ஹெல்மெட்டை போடுங்க,தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில் கணக்கு
இருப்பவர்கள் ஓட்டை போடுங்க..... நன்றி....
ஜெட்லி...(சரவணா...)