Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

Tuesday, June 8, 2010

காயத்ரியுடன் இரு அனுபவம்!!

காயத்ரியுடன் இரு அனுபவம்!!


ரெண்டு வாரம் முன்னாடி தாங்க தலைவர் சுஜாதா எழுதின கதை தொகுப்பு காயத்ரியை வாங்கி படிச்சேன்.மொத்தம் அஞ்சு கதை இருந்தது.முதல் கதை காயத்ரி கொஞ்சம் பெரிய கதைதான் என்றாலும் செம விறுவிறுப்பு. அதுவும் சுஜாதா அவர்கள் கதை சொல்லும் விதம் செம. இந்த கதை தினமணி கதிரில் 1976ல் தொடர்கதையாக வந்தது என்று தெரிந்துகொண்டேன்.அதன் பின் காயத்ரி 1977ல் படமாகவும் காட்சி தந்திருக்கிறாள். சுப்பர்ஸ்டார் ரஜினி தான் நடித்திருக்கிறார் ஹீரோவாக அல்ல வில்லனாக...!!


நான் எழுதபோவது விமர்சனம் அல்ல...காயத்ரியுடன் என் அனுபவம் மட்டுமே.அதாவது புத்தகம் மற்றும் படங்கள் எனக்கு தந்த ஆச்சரியங்களும் ஏமாற்றங்களும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் அவ்வளவே.

காயத்ரி கதை:

சுஜாதாக்கு காயத்ரி கதையில் அவருக்கே ஒரு ரோல் இருக்கும்.
அவரின் மூலமாகத்தான் கதையை நகர்த்துவார்.அதாவது மூர்
மார்க்கெட் சென்று அங்கு பழைய புத்தகத்தை வாங்கும் போது
தான் காயத்ரி எழுதிய சில குறிப்புகள் அடங்கிய நோட் புத்தகம்
கிடைக்கும்.பின்பு காயத்ரியின் கதையை அவள் எழுதிய அந்த
புத்தகத்தின் எழுத்துக்கள் மூலம் கதையை நகர்த்துவார்.
காயத்ரிக்கு ராஜரத்னம் என்பவருடன் திருமணம் ஆனதில்
இருந்து அங்கு நடக்கும் சில சம்பவங்கள் ராஜரத்னம் அவர்களின்
அக்கா,மற்றும் சமையல் அய்யரின் வினோத நடவடிக்கைகள்
குறித்து சுவாரசியத்துடன் கதை செல்லும்.

காயத்ரி வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத சூழலில் தன்னை யாராவது காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் "அவசரம் அவசியம்" என்று ஒரு நோட் புத்தகத்தில் தன் அனுபவத்தை எழுதுகிறாள்.பழைய பேப்பர்க்காரன் வரும் நேரம் பார்த்து தான் எழுதிய புத்தகத்தை நடுவில் வைத்து பழைய பேப்பர் கடையில் சேர்ந்து அது நம் எழுத்தாளரிடம் கிடைக்கிறது...அதன் பின் எழுத்தாளர் தன் நண்பன் வக்கீல் கணேஷ் மற்றும் அவரது உதவியாளர் வஸந்த் மூலம் எப்படி காயத்ரியை காப்பாற்றுகிறான் என்பதே சுஜாதா எழுதிய கதை.


சரி ராஜரத்னம் வீட்டில் என்னதான் நடந்தது நீங்க கேட்டா...
காயத்ரி குளிக்கும் போது யாரோ அவளை வாட்ச் பண்ற மாதிரி
ஒரு பீலிங் அதே போல் ரத்னத்துடன் படுக்கையிலும் அதே
பீலிங். அது தவிர சரசு அக்காவின் டார்ச்சர் வேறு.இதை கணேஷ்
தான் கண்டுபிடிக்கிறார் அதாவது scandal எடுத்து வெளிநபர்களுக்கு
அதை விற்று பணம் பண்ணுவதே ராஜரத்னம் குழுவுக்கு தொழில்.
இந்த கதையில் வழக்கம் போல் வஸந்தின் சொல்லுக்கு குறைவில்லை.

காயத்ரி படம்:


கதையை படித்த பின் எனக்கு படத்தை பார்க்க ஆவல் தூண்டியது.
இந்த மாதிரி ஒரு கதையை எப்படி படம் எடுத்திருப்பார்கள் என்று
ஒரு ஆவல் வந்தது. அதுவும் ரஜினிகாந்த் வேற நடித்து இருக்கிறார்
ஒரு வேலை அவர்தான் கணேஷோ என்று நினைத்தாவரே சி.டி.யை
போட்டேன்.

முதல் பெயர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் என்று வந்தது பின்பு
தான் ரஜினி பெயர் அப்புறம் ஸ்ரீதேவி பெயர். ஜெய்சங்கர் தான்
கணேஷ்ஆக வருகிறார்.ரத்னமாக ரஜினி. காயத்ரியாக ஸ்ரீதேவி.
இந்த படம் 1977 இல் A சான்றிதழுடன் வெளிவந்துள்ளது. இளையராஜா
இசையமைத்து இருக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து இப்போது தான்
ஒரு கருப்பு வெள்ளை படத்தை பார்க்கிறேன்.

காயத்ரி கதையில் மட்டும் கஷ்டங்கள் நிறைய அனுபவிக்கவில்லை
படம் எடுக்கப்பட்ட விதத்திலும் அனுபவத்திருக்கிறாள் போலும்.
பல மாற்றங்கள் உடன் படம் வந்திருக்கிறது. அந்த டைமில் இந்த
படம் ஒடிச்சானு எனக்கு தெரியாது... ஆனா இப்போ பார்க்கறதுக்கு
ஏதோ ஒரு நாடகம் பார்ப்பது போல் தான் இருந்தது. அதுவும் இல்லாமல் புத்தகத்தில் காயத்ரியின் கேரக்டர் நன்றாக தெரியும்
ஆனால் படத்தில் அப்படியெல்லாம் இல்லை முதல் சீனே பெண்
பார்த்து கல்யாணம் ஆகிவிடும்.

மெட்டி ஒலியில் அப்பாவாக வரும் டெல்லி குமார் இதில் ஸ்ரீதேவியின் அப்பாவாக வருகிறார். அதே குரல் அதே கனீர்!! புத்தகத்தை படிக்கும் போது இருந்த ஒரு பரபரப்பு படம் பார்க்கும் போது இல்லை என்றே சொல்ல வேண்டும். அதே போல் கணேஷ் கேரக்டர் ஜெய்ஷங்கர்க்கு சுத்தமாக செட் ஆகவில்லை. சுஜாதாவின் பல நாவல் படித்தவன் என்கிற முறையில் கணேஷ் எப்படி இருக்கணும் எனக்கு ஒரு ஐடியா இருக்கு ஆனா ஜெய்சங்கருக்கு பாடி லாங்குவெஜ் எதுவுமே சரியா இல்லை.


அப்புறம் கதையில் வந்த வஸந்த் கேரக்டரை படத்தில் காணவில்லை
வஸந்தின் சேட்டையையும் சேர்த்து அந்த எழுத்தாளர் பாத்திரத்தில்
வரும் வெண்ணிற ஆடை மூர்த்தியே செய்து விடுகிறார்.
படத்துக்கும் கதைக்கும் பல மாற்றங்கள் செய்து இருக்கிறார் திரைக்கதை ஆசிரியர் பஞ்சு அருணாச்சலம். பட்டாபிராமன் அவர்கள்
படத்தை இயக்கியுள்ளார்.


கதையை படித்த பின் படம் பார்த்த எனக்கு காயத்ரி படம் ஒரு
ஏமாற்றம் தான். ஒரு வேளை அந்த காலத்தில் படம் எடுத்ததால்
அப்படி ஒரு பீலிங்ஆ என்று தெரியவில்லை. இல்லை ஏற்கனவே
இது தான் கதை என்று தெரிந்த பின் வந்த பீலிங்ஆ என்று
தெரியவில்லை.


அடுத்தது சுஜாதாவின் ப்ரியா கதையை படிக்கலாம்னு இருக்கேன். படத்தை ஏற்கனவே பார்த்து இருந்தாலும் கதையை படிச்சுட்டு இன்னொரு தடவை படத்தை பார்க்கணும். சுஜாதா அவர்களின் கொலையுதிர் காலம் நாவலை படமாக எடுத்தால் நன்றாக இருக்கும். நல்ல த்ரில்லிங் கதை. என்னது அதையும் ஏன் படம் எடுத்து கெடுக்கணுமா...?? அதுவும் சரி தான்.

இது சும்மா....
இப்போது யாராவது கணேஷ் வஸந்தை வைத்து படம் எடுத்தால் எந்த நடிகர் சரியா இருப்பாங்க...??னு நீங்க நினைக்கிறிங்க.

எனக்கு என்னவோ கணேஷாக அஜித்தும் நம்ம ரேடியோ மிர்ச்சியில் காலையில் வருவாரே அஜய் அவர் வஸந்த் கேரக்டர்க்கு செட்
ஆவாங்கனு தோணுது...!!


ஜெட்லி...(சரவணா...)

Wednesday, January 6, 2010

சுஜாதா சந்தோஷப்படுவார் (என்று நம்புகிறேன்)

"ஹைக்கூ என்னும் கவிதை வடிவம் ஜப்பானிலிருந்து நமக்கு வந்து, தமிழுக்கு ஏற்ப மேலும் மாறி, மிகமிக பிரபலமாகி, சுலபமாக்கப்பட்டு, நிஜ ஹைகூக்கள் அடையாளமிழந்து சமூகச்சாயம் ஏற்றிய, மூன்று வரிகளில் எழுதப்பட்ட எல்லாக் கவிதைகளும் ஹைக்கூ என்கிற கேவலநிலைக்கு வந்துவிட்டதால், உண்மையான ஹைக்கூக்களை அடியாளம் கண்டுகொள்ள இந்த மாதிரியான புத்தகங்கள் தேவை என்று தோன்றி இது எழுதப்பட்டது. இதைப் படித்தபின் பல ஹைக்கூக்கள் எழுதப்படாமல் இருந்தால் இப்புத்தகத்தின் குறிக்கோள் நிறைவேறுகிறது."

இது ஹைக்கூ - ஒரு புதிய அறிமுகம் புத்தகத்திற்கு சுஜாதா எழுதிய முன்னுரை. அதில் அவர் மேலும் சொல்கிறார்,

ஒரு ஹைக்கூ எழுதும்போது, "எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது, அதை உன்னுடன் பகிர்த்துகொள்ள விரும்புகிறேன். அந்த அனுபவத்தை, என்னில் ஏற்படுத்திய சம்பவத்தை உனக்கு சொல்கிறேன். அதே மாதிரி அனுபவம் அல்லது உணர்ச்சி உனக்கு ஏற்படுகிறதா பார்" என்று சொல்கிறோம்.

அனுபவம் அல்லது உணர்ச்சி கடத்தல் ஹைக்கூ..ஒரு சில வார்த்தைகள் மூலம்,
 
நள்ளிரவில்
தூரத்தில் ஒரு கதவு
இழுத்து சார்த்தப்பட்டது.


உடனே பார்க்கும்போது இந்த மூன்று வரிகள் ஒரு நிகழ்ச்சியை விவரிக்கும் வெறும் வரிகள்தாம். ஆனால் சற்றே சிந்திக்கையில் இதன் பரிமாணங்கள் விரிவதை கவனிக்க முடியும். நள்ளிரவு இந்த வரிகளை எழுதியவன் விழித்திருக்க வேண்டும். அவன் தனிமை வெளிப்படுகிறது. அவனுக்கு ஏன் தூக்கம் வரவில்லை? கவலையா? தனிமையா? உடல் நலமில்லையா? எங்கே இவன் விழித்திருக்கிறான்? நகரத்திலா, கிராமத்திலா? நகரத்தில் இருக்க முடியாது, அத்தனை நிசப்தம் நகரத்தில் எது? தூரத்தில் கதவு சாத்தப்படும் சப்தம் கேட்க முடிகின்ற நிசப்தம், அந்த சப்தத்தின் அர்த்தம் என்ன? அந்த வேலைக்கு வீட்டுக்கு வந்தது யார்? ஒரு தகப்பனா, ஒரு மனைவியா, ஒரு மகனா, வயசுக்கு வந்த பெண்ணை? அல்லது யாராவது கோபத்தில் வீட்டை விட்டு வெளியே செல்கிறார்களா?

மூன்றே மூன்று வரிகள். அவை ஏற்படுத்தும் சலனங்கள் எத்தனை பாருங்கள். உங்கள் சிந்தனை என்னும் ஜலப்பரப்பில்  எறியப்படும் சிறிய கல் ஹைக்கூ.


தலைவர் சொன்னதை படிச்சாச்சா, இப்போ என்னோட ஹைக்கூ (அப்படி ஒத்துக்கொள்வதும், கொள்ளாததும் உங்கள் இஷ்டம்) படியுங்கள்,

கடந்து செல்லும் ரயில்
கதவோரம் இளைஞன்
கண்களில் நீர்.


தலைவர் இவ்வளவு சொன்னதுக்கப்புறமும் என்னால எழுதாம இருக்க முடியல, ஒரு வேளை இது நிஜமாகவே ஹைக்கூவாக இருந்தா அவர் சந்தோஷப்படுவார்.

பின்குறிப்பு:

மூணே மூணு வரி மட்டும் எழுதினா, தலைப்பு மட்டும் இருக்கு, மேட்டர் இல்லைன்னு, நீங்க திரும்பிப் போயிட்டா என்ன பண்ணுறதுன்னு தான், அவரோட முன்னுரையை எடுத்து போட்டிருக்கேன்.

முன்னுரையோட விடவேண்டியது தானே, எதுக்கு கவிதை விளக்கம் எல்லாம் எழுதிருக்கேன்னு கேட்டீங்கன்னா, அந்த கவிதை படிச்சப்போ எனக்கு ஒண்ணும் தோணலை, விளக்கம் படிச்சதுக்கு அப்புறம் தான் இப்படியும் இருக்கோன்னு தோணிச்சு. அதே மாதிரி என் கவிதைல எதுவும் உங்களுக்கு தோன்றாவிட்டால், உதாரணமா இருக்கட்டுமேன்னு தான் அதையும் எழுதினேன்.

ஹைக்கூ - ஒரு புதிய அறிமுகம்
உயிர்மை - Rs 40

 
நன்றி
சங்கர்