நான் கூர்க் போறது தீடிர்னு தான் முடிவாச்சு. நண்பர் ஜீத்தின் அழைப்பின் பேரில் மைசூர், கூர்க் செல்ல வெள்ளிக்கிழமை இரவு சென்ட்ரல் அடைந்து மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பிடித்தோம். நான், ஜீத், பார்த்திபன், சுரேஷ், சிவசூரியன், கோபிகிருஷ்ணா, சண்முகம், ரமேஷ் என்று மொத்தம் எட்டு பேர் சென்றோம்.
ரெயிலில் போகும் போதே பயணம் களை கட்ட ஆரம்பித்து
விட்டது. ரெயில் பெங்களூர் அடைந்த போது குளிர தொடங்கி
விட்டதால் எங்களில் சிலருக்கு தூக்கம் கலைந்து விட்டது.
பின்பு மைசூர் வரை கொஞ்சம் நேரம் பேசி கொண்டும் மறுபடியும்
கொஞ்சம் நேரம் தூங்கி கொண்டும் போனோம். ரெயில் பயணத்தில்
மைசூர் செல்லும் வழியில் அருமையான இயற்கை காட்சிகளை
ரசித்தோம்.ஜீத் ஏற்கனவே ஹோட்டல் மற்றும் கார் புக் பண்ணிவிட்டதால்..நாங்கள் ஸ்டேஷன் இறங்கியவுடன் காரில் ஏறினோம்...
எங்கள் பிளான்...முதலில் கூர்க் பார்த்து விட்டு ரிட்டன் வரும்
போது மைசூர் பார்க்கலாம் என்பதே. அதனால் கூர்க் மடிகரி
நோக்கி வண்டி ஓடியது..நடுவில் மைசூரில் நலபாக் என்னும்
ஹோட்டலில் காலை உணவை முடித்தோம். வடை நன்றாக
இருந்தது. பொங்கல் தான் மோசம். நம்ம ஊரில் உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது கொடுக்கும் குழைகஞ்சி போல் இருந்தது. சாம்பாரோ என்னவோ இனிப்பா இருந்தது.
மடிகரி முன்னாடி ஒரு இடத்தில் தொங்கும் பாலத்தில் சென்று
அங்கே ஓடிய ஆறில் அனைவரும் குளியல் போட்டோம்.
ஆற்றின் வேகம் கொஞ்சம் அதிகமாவே இருந்தது. கால் சரியாக
வைக்கவில்லை என்றால் கண்டிப்பாக அடிப்படும். அங்கேயே
ஒரு மணி நேரம் மேல் செலவு செய்தோம். நண்பர் சண்முகம்
கடைசியில் ஸ்டில் எடுக்க ஆசைப்பட்டு கேமரா எடுக்க போகும்
போது ஜீத்தின் செல்போன் தவறி தெரியாமல் தண்ணீரில் விழுந்து விட்டது.. கொஞ்சம் நேரம் தேடி பார்த்தோம் கிடைக்கவில்லை..!!
மதியம் கூர்க் மடிகரி சென்று அடைந்தோம். அங்கே ஹில் ஸ்டேஷன் என்ற ஹோட்டல் தான் நண்பர் புக் செய்து இருந்தார். நான் கூர்க் போறதுக்கு முன்னாடியே நம்ம வீடுதிரும்பல் மோகன்குமார் அண்ணன் எழுதிய கூர்க் பதிவை மீண்டும் ஒரு முறை படித்தேன். ஹில் ஸ்டேஷன் ஹோட்டல் பற்றி அவர் எழுதி இருந்ததால் அங்கே நாங்கள் உணவை சாப்பிடவில்லை.
மற்றபடி ரூம் எல்லாம் ஓகே தான்,,,
அப்போ அப்போ மழை பெய்ததால் கொஞ்சம் சங்கடமா இருந்தது...
ராஜாஸ் சீட் என்ற இடத்தை பார்க்க போனோம்....அந்த காலத்தில்
ராஜா அங்கே உட்கார்ந்து தான் சூர்ய அஸ்தமனத்தை பார்ப்பாராம்...
நாங்கள் அங்கே போகும் போது வெறும் பனி தான் தெரிந்தது... ஆனால் இயற்கை காட்சிகள் செம...
அப்புறம் நைட் உடிப்பி ஹோட்டலில் பார்சல் வாங்கி வந்து கொஞ்சம் நேரம் சீட்டில் கழுதை விளையாடி படுத்து விட்டோம்.அடுத்த நாள் காலையில் டீ குடிக்க பக்கத்தில் உள்ள கடைக்கு போனோம்...அந்த குளிருக்கு டீ சூப்பர்ஆ இருந்தது...அப்போது அங்கே வந்த மீன் விற்கும் நபர் தானும் சென்னை காசிமேடு தான்...இங்கே வந்து பத்து வருடம் ஆகிறது என்று நன்றாக
பேசினார்.அப்புறம் தலைகாவேரி பார்க்க போனோம்.. அதை பார்க்க
போறதுக்குள் என் தலையெல்லாம் சுத்த ஆரம்பிச்சுடுச்சு...
தலைகாவேரி முன் ஒரு கோவிலுக்கு சென்று வழிப்பட்டோம்..
காவேரியை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரலாம்...
காவேரியை சுத்தி மட்டும் காட்டறீங்க... ஆனா எங்க ஊருக்கு மட்டும் விட மாட்ரீங்க?? என்று டிரைவரிடம் கேள்வி கேட்டேன்... அதற்கு அவர் "உங்களுக்கு வேணும்னா ரெண்டு காலி பாட்டிலில் வேணும்னா எடுத்துட்டு போங்க..." என்ற சிரித்து கொண்டே சொன்னார்... என்ன பண்றது... சிரிக்க மட்டும் தான் எங்களாலும் முடிந்தது....!!
தலைகாவேரி சென்ற போது மழை தூறல்கள் மற்றும் பனி
இருந்ததால் உடம்பு நடுங்கிவிட்டது.நாங்க காவேரினு சொன்ன உடன் ஒரு குளியல் போட்டு விடலாம் என்று துண்டை எடுத்து வந்தோம். அங்கே பார்த்தால் ஒரு குளத்தில் தண்ணியை கட்டிவச்சு அது தான் தலை காவேரி என்று சொன்னார்கள். அப்புறம் ஒரு 400 படி இருக்கலாம் அதை ஏறி போய் பார்த்தால் ஏதோ தெரியும் என்றார்கள். அங்கே போய் பார்த்தால் முழுவதும் பனி தான்...ஆனா நம்மை சுத்தி பனி இருந்தா எப்படி இருக்கும்...செம,..
புதிய அனுபவம்...!! அப்போது நண்பர் சண்முகம் வளைத்து வளைத்து போட்டோ எடுத்து கொண்டிருந்தார்..அப்போது என் கூட இருந்த சிவா " இவரு பெரிய பி.சி.ஸ்ரீராம்...சீக்கிரம் வாடா..." என்றார். உடனே அங்கே மேல வந்த வேறு ஒருவர் " ஏன் நிரவ் ஷா இல்லையா....." என்ற கேட்டபடியே சிரித்து
கொண்டே போனார்.
மடிகரி ஊரை பற்றி சொல்ல வேண்டும்....ஒரு விஷயத்தில் அவர்களை பாராட்டலாம் அது பிளாஸ்டிக் பை தடை விஷயத்தில்.எதை வாங்கினாலும் பேப்பரில் தான் மடித்து தருகிறார்கள்...பிளாஸ்டிக் யூஸ் பண்ணினால்
வாங்கினால் அதில் சிக்கனை காணோம்...! டீ கடையில் நிக்கும் போது ஒரு நாய் வந்தது அதற்கு நம்மூர் மூணு ரூபாய் பன் வாங்கினால் அது அங்கே ஆறு ரூபாய்....!
நடுவில் சிவாவும் கோபியும் டிரைவரிடம் எப்படி கன்னடத்தில்
"ஐ லவ் யு" சொல்லுவது என்று கேட்டனர். அதற்கு அவரும்
ஏதோ ப்ரேமிச்தான் என்று ஏதோ சொன்னதாக நினைவு....
" வேணாம்..இங்கே யார் கிட்டயும் சொல்லிடாதீங்க....
கூப்பிட்டு வந்த என்னை தான் முதலில் அடிப்பாங்க...
நேத்தே பெரிய பிரச்சனை ஆச்சு.." என்றார் சீரியஸ் ஆக...
மைசூர்...!!
நாங்கள் திங்கள் காலை மைசூர் கிளம்ப ரெடி ஆனோம். டிரைவர்
மைசூர் போகும் முன் துபேர் காடு இருக்கிறது...யானைகள் இருக்கும்
என்றார். ஒருவர் படகில் செல்ல இருபது ரூபாய்..சுமார் ஒரு கிலோ
மீட்டர் ஆறு தான் இருக்கும் அதை கடந்து செல்ல வேண்டும்.
நாங்கள் போகும் போது யானையை குளிப்பாட்டி கொண்டு
இருந்தனர். யானை தீடிர் தீடிர் தும்பிக்கையால் தண்ணியை உறிந்து ஷவர் மாதிரி மக்கள் மீது அடித்தது. என்ன நான் கொஞ்சம் க்ளோஸ்சில் போகும் போது தண்ணி நிறைய அடிச்சதால நண்பர்கள் "டேய் அதுக்கிட்ட போய் என்னடா பண்ண" என்று கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்...!!
மதியம் மைசூர் வந்தவுடன் ஹோட்டல் சித்தார்த்தாவில் மீல்ஸ்
சாப்பிட்டோம். வந்த மூணு நாளில் சாப்பிட்ட ஹோட்டல்களில்
இங்கே மட்டும் தான் சாம்பார் ஓரளவுக்கு நன்றாக இருந்தது.
அதன் பின் ஜூ பார்க்க கிளம்பினோம். உள்ளே நுழைந்தவுடன்
ஒட்டகச்சிவங்கி ஒன்று அசையாமல் நின்று கொண்டு இருந்தது..
நான் அதை சிலை என்று நினைத்து.."ஏன்டா சிலையை போய்
போட்டோ எடுக்குற" சண்முகத்திடம் சொல்ல...அது வால்
அசைத்து வலம் வர ஆரம்பித்ததும் என் மூஞ்சில் அசடு வழிந்தது...!!
புலியை வெளியே விடாமல் கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தார்கள்... புலிகள் கூண்டுக்குள்ளேயே வீர நடை போட்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது. அது நடக்கும் போதும் "என்னை மட்டும் வெளியே விட்டு பாருங்கடா.." என்று கோபத்தில் நடப்பது போல் இருந்தது. வெள்ளைபுலி அனைவரையும் கவர்ந்தது...நல்ல பெருசு... நண்பர் சுரேஷ் அந்த புலி திரும்பி நிற்கும் போது " hey.. turn back " என்று போட்டோ எடுக்க புலியிடம் பேசினார்...
அது என்ன நினைச்சுதோ தெரியலை...தீடிர்னு திரும்பி நின்னு சுரேஷ் மீது உச்சா போய் விட்டது...!!
ஜூவில் போய் கொண்டிருந்த போதே மழை கொட்ட ஆரம்பித்து
விட்டது. கரண்ட் கம்பியில் இருந்து வந்த தீ பொறியை பார்த்து
கரடி செம ஓட்டம் எடுத்தது. நாங்கள் கொஞ்சமாக நனைந்த
பின் அங்கே இருந்த ஒரு பெட்டி கடையில் தஞ்சம் புகுந்தோம்.
மழை விட்டவுடன் திரும்பவும் ரவுண்ட் அடிக்க கிளம்பி அடுத்து
மைசூர் பேலஸ் பார்க்க சென்றோம்.
பேலஸ்சின் பிரமாண்டம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை..
மெய் மறந்து சுத்தி பார்த்தேன் என்றால் அது பொய்.. ஆனால் பிரமித்தது மட்டும் உண்மை. பேலஸ் முடிந்தவுடன் டிரைவர் ஏதோ சாண்டல் பாக்டரிக்கு ஷாப்பிங் போலாம்னு சொன்னார். அங்கே போன அது ஒரு கடை...அதை பாக்டரி என்று ஏன் சொல்றாங்கனு தெரியலை...கண்டிப்பா அங்கே எதுவும் யாரும் வாங்க போறதில்லைனு... வேறு இடத்துக்கு போக சொன்னோம். ஷாப்பிங் சென்று ரெண்டு ரூபாய் வடை வாங்கி சாப்பிட்டோம். அப்புறம் அதே தள்ளுவண்டி கடையில் ரெயிலில் செல்ல இரவு உணவு இட்லி வாங்கி கொண்டோம்...மீண்டும் ரெயிலில் சீட் விளையாட ஆரம்பித்து அப்புறம் தூங்கி சென்னை வந்து சேர்ந்தோம்....!!
இது தான் நாங்க மைசூர் மற்றும் கூர்க் சென்று வந்த கதை...
இந்த இடுகை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் பொன்னான
வாக்கை குத்துங்கள்....!!
நன்றி
ஜெட்லி... (சரவணா...)