Showing posts with label ஆராய்ச்சி. Show all posts
Showing posts with label ஆராய்ச்சி. Show all posts

Thursday, November 26, 2009

ஓர் இலக்கிய திறனாய்வு

நீங்கள் தமிழ்வழி கல்வியில் உங்கள் பள்ளிக்காலத்தை கழித்திருந்தால், உயர்நிலை வகுப்புகளில் இலக்கிய திறனாய்வு என்றொரு விஷயத்தை தமிழ் இரண்டாம் தாளில் கடந்து வந்திருப்பீர்கள். பயின்ற வகுப்பையும் அவ்வாண்டின் பாடத்திட்டத்தையும் பொறுத்து "செவ்வாழை"யையோ, "குறட்டை ஒலி"யையோ, "முள்முடி"யையோ கொத்துக்கறி போட்டிருப்பீர்கள். இதோ மீண்டுமொரு அரிய வாய்ப்பு. ஒரே வேறுபாடு, நீங்கள் ஆராயப்போவது கதையோ கவிதையோ இல்லை, ஒரு நகைச்சுவை துணுக்கு. ஆரம்பிக்கலாமா?

இரண்டு நாட்களாய், வடகிழக்கு பருவமழை போலவே, வருவதும் போவதுமாய் போக்கு காட்டிக்கொண்டிருந்த காய்ச்சல் முழுவீச்சில் தொடங்கியதாலும், அலுவலகத்தில் ஏசி அதிகமாயிருந்த காரணத்தாலும் சீக்கு வந்த கோழிபோல் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு ரயிலில் வீடுதிரும்பிக்கொண்டிருந்தேன். முன்னொருமுறை இதுபோன்றதொரு சூழலில் இதேபோல் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு வந்தபோது, ஒரு பெண்ணிடம் கொண்ட மோகத்தால் இறங்க வேண்டிய நிலையத்தை தவறவிட்டு அடுத்ததில் இறங்கி, அதற்குப்பின் வேருவண்டியும் இல்லாத காரணத்தால் ஐந்து கிமீ நடந்த அனுபவம் இருப்பதால், தூங்க விடாத இரைச்சலாக இருக்கட்டுமென பண்பலையை ஆன் செய்து handfreeயை காதில் வைத்தேன்.அலைவரிசை மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருந்தபோது காதில் விழுந்தது ஒரு முத்து. இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவையென சுஜாதா விருது கொடுத்திருக்கக் கூடிய அந்த ரத்தினம் இதோ.



"நீங்கள் அடுத்து கேட்கப்போவது இளையதளபதி விஜய் நடித்த வில்லு என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்திலிருந்து ஓர் அழகான, இனிமையான பாடல்"

இங்கே துவங்குகிறது உங்களுக்கான சவால், மேலே இருக்கும் வரியில் அடிக்கோடிடப்பட்டிருக்கும் எந்த வார்த்தை அதிகபட்ச நகைச்சுவை உணர்வைக் கொண்டிருக்கிறது? எந்த வார்த்தை இந்த வாக்கியத்தை உலகத்தரத்திற்கு உயர்த்துகிறது? உங்கள் இலக்கிய திறனாய்வை பின்னூட்டத்தில் சமர்ப்பிக்கலாம். மிகச்சிறந்த ஆய்வுக்கட்டுரைகளுக்கு முதல் பரிசாக, வெளிவர இருக்கும் வேட்டைக்காரன் திரைப்படத்தின், முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் ஒன்று வழங்கப்படும். அந்தக் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் கம்பெனி சார்பில் புக் செய்யப்படும் என்பதையும் உங்களுக்கு ஒரே ஒரு டிக்கெட்தான் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் (தற்கொலை செய்துகொள்ள தனியாய்தான் செல்ல வேண்டும்). இரண்டாம் பரிசாக வில்லு மற்றும் குருவி திரைப்படங்கள் அடங்கிய DVD வழங்கப்படும். மூன்றாம் பரிசாக என்ன கொடுக்கலாம் என்பதையும் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்.





இந்த ஒற்றைவரி தந்த உற்சாகத்தாலும், புதியதொரு இலக்கிய படைப்பை உங்களுக்கு வழங்க ஒரு வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தாலும், கொதிக்கும் உடம்பையும் மறந்து சைக்கிளை உருட்டியபடி ஸ்டேஷனிலிருந்து வீடுவந்து கொண்டிருந்தபோது, Z போல் வளைத்து வளைத்து ஓட்டிவந்த ஒரு புண்ணியவான் வண்டியை நேரே என் சைக்கிளில் விட்டார், அவர் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் T-Shirt உம், கையில் கட்டியிருந்த கைக்குட்டையும் பார்த்தபோது, அவர் விஜய் ரசிகராயிருக்க கூடிய சாத்தியங்கள் மிக அதிகமென தோன்றியது. யோசனை செய்தபோதே வண்டியில் வந்து மோதுபவர்கள், வீட்டுக்கு ஆட்டோ அனுப்பினால் என்ன செய்வது என்ற அச்சம் இருக்கும் போதிலும், நீங்கள் தரப்போகும் ஆதரவின் தைரியத்தில்இப்பதிவை இடுகிறேன்.

டிஸ்கி:
இப்பதிவை படிக்கும் ரசிகர்கள் யாரும் கோபப்படவேண்டாமென்றும், அசல் மற்றும் சிங்கம் திரைப்படங்கள் வெளிவரும்போதும் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

Tuesday, November 17, 2009

சூரியனுக்கே டார்ச் அடிப்போம் - இன்னுமொரு ஆராய்ச்சிக் கட்டுரை

இப்போது எங்கு பார்த்தாலும், உலகம் வெப்பமயமாகிறது, பனிமலை உருகுது, கடல் நீர்மட்டம் உயருதுன்னு தான் பேச்சு. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வளர்க்கப்படும் நாய்கள், ச்சே, நாடுகள்னு, எல்லா நாட்டு தலைவர்களும் கூடிக் கூடி பேசறாங்க. இதே நிலைமை நீடிச்சா முதலில் கடலுக்குள் போகும்னு நம்ம விஞ்ஞானிகள் ஜோசியம் சொல்லி இருக்கும் மாலத்தீவு மக்களோ, 'எவனோ தூங்கறதுக்கு, நாங்க எதுக்கு கண் முழிக்கணும்னு', கேட்டுக்கிட்டிருக்காங்க. நாமோ, வீட்டுக்குள்ள சுனாமி வரும்வரை எங்களுக்கு கவலை இல்லை என்று சுற்றித் திரிகிறோம். எப்படியும் இருநூறு வருஷத்துக்குள்ள வேறு இடம் தேடவேண்டி இருக்கும், அது ஒரு நூறு வருஷம் முன்னாடியே நடந்தா ஒண்ணும் தப்பில்லை. எந்த சிக்னலிலும் வண்டிய ஆப் பண்ண வேண்டாம், இருக்கற ஏரி, குளமெல்லாம் வீடு கட்டலாம், இருக்கும் கொஞ்ச நஞ்ச காட்டையும் வெட்டி விற்றுவிடலாம், ஆளுக்கு ஒரு கடப்பாரை எடுத்து ஓசோன் மொத்தத்தையும் ஓட்டையாக்கி விடலாம், இன்னும் ஒரு அம்பது வருஷம் முன்னாடியே இடத்தை காலி செய்துவிடலாம், ஒண்ணும் தப்பில்லை.



சூரியனிலிருந்து வரும் புறா ஊதா (UV) கதிர்கள் பூமியை தாக்காமல் தடுக்க இயற்கை அமைத்த குடைதான் இந்த ஓசோன் படலம் (ஆறாம் வகுப்பிலேயே படித்த விஷயம்னு கூறுவது காதில் விழுகிறது), எத்தனையோ கோடி ஆண்டுகளாய் சூரியனாலேயே தாண்ட முடியாத அந்த படலத்தை, வெறும் நூறாண்டு விஞ்ஞான வளர்ச்சி மூலம் கிழித்தெறிந்தது, மனித குலத்தின் மகத்தான சாதனை தான். வட அமெரிக்கா முழுவதையும் விழுங்கும் அளவு விரிந்துவிட்ட ஓட்டையை பார்த்தபின்தான், விஷயம் கை மீறி செல்வதற்குள் ஏதாவது செய்தாகவேண்டும் என்று முடிவு செய்த உலக விஞ்ஞானிகள், ஏசி ரூம் போட்டு யோசித்து ஒரு புது வழி கண்டுபிடித்திருக்கிறார்கள், அதன் ஒரு வரிச்சுருக்கம் தான் இந்த கட்டுரை தலைப்பு.


சூரிய கதிர்கள் எவ்வளவு அதிகமாய் ஓசோன் ஓட்டை வழியே வருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு வேகமாய் பூமியில் பனிப்பாறைகள் உருகும், வெப்பநிலை உயரும். இந்த கதிர்களை வரும் வழியிலேயே மடக்கி திருப்பி அனுப்பிவிட்டால், பாதிப்பின் அளவு குறையும். இந்த திட்டத்தின்படி பூமியின் காற்றுமண்டலத்தின் மேலடுக்கான ஸ்டரடோஸ்பியரை (stratosphere), பல்லாயிரம் டன் எடை கொண்ட, எதிரொளிக்கும் தன்மை உடைய, சல்பேட் (sulfat) போன்ற வேதிபொருட்களை சிறுசிறு துகள்களாக செய்து நிரப்புவதன் மூலம் சூரிய ஒளியை எதிரொளித்து வெப்பத்தின் அளவை குறைக்கலாம் என கண்டறிந்திருக்கிறார்கள். கடந்த 1991-ஆம் ஆண்டு பிலிப்பைன்சின் பினாடுபோ (pinatubo) எரிமலை நெருப்பை கக்கிய போது வெளிவந்த சல்பர் புகை சில ஆயிரம் சதுர கிமீ பரப்பை வானம் தெரியாத அளவு மூடிவைத்தது. ஆனால் இந்த வெடிப்பின் மூலம் நிகழ்ந்த ஒரு பெரும் நன்மை, புவியின் வெப்பநிலை ஒரு பாரன்ஹீட் அளவு குறைந்தது. இந்த நிகழ்வுதான் மேலே சொன்ன யோசனையை விஞ்ஞானிகள் மத்தியில் தோற்றுவித்தது. இந்த மாபெரும் யோசனையின் நடைமுறை சாத்தியங்கள் குறித்ததான விவாதங்கள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன.




சமீப காலமாய், இந்த ஆய்வை செயல்படுத்துவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் மேல்விவரங்கள் குறித்து கம்பேனி மேற்கொண்ட ஆய்வில், சில ஆச்சரியம் தரும் உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்த ஆண்டு ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் நாசா விஞ்ஞானி ஒருவரும் இடம்பெற்றுள்ளார். இந்தியாவின் சார்பில் ஒருமனதாய் பரிந்துரைக்கப்பட்டுள்ள "மதுரை சம்பவம்" எனும் திரைக்காவியத்தை இவர் பார்க்க நேர்ந்திருக்கிறது. அந்த படத்தில் எங்கள் நாயகன் ஹரிக்குமார் பேசிய "நாங்கல்லாம் சூரியனுக்கே டார்ச் அடிப்போம்ல" எனும் வசனம் தான், கடந்த சில ஆண்டுகளாய் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தத் திட்டத்தை உலகின் பார்வைக்கு மீண்டும் கொண்டுவர காரணமாய் இருந்திருக்கிறது. இதனையடுத்து நாயகன் ஹரிக்குமாருக்கு ஆஸ்கர் விருது கொடுப்பது போதாதென்று கருதிய தேர்வுக்குழு, அடுத்த ஆண்டிற்கான 'உலக சமாதனம் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கான' நோபல் பரிசுக்கு இவரை பரிந்துரை செய்துள்ளது. ஆனால் நோபல் பரிசுக்குழுவில் சிலரோ இந்த ஆண்டே இவருக்கு இப்பரிசை வழங்க வேண்டுமென விரும்புவதாய் அறிகிறோம். இதனால் ஒபாமாவிடமிருந்து பிடுங்கப்பட்டு ஹரிக்குமாருக்கு வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் வசனகர்த்தாவின் பெயர் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்குபரிந்துரைக்கப்பட்டுள்ளது.


புதுமுக நடிகரின் படத்தில் ஒருவரி பன்ச் டயலாகுக்கே, இரண்டு நோபல் பரிசுகள் கிடைக்குமென்றால், நமது தலைகளும், தளபதிகளும் இன்னும் பலரும் பேசும் வசனகளுக்கெல்லாம் என்னென்ன கிடைக்குமென்று எண்ணிப்பாருங்கள். இது போன்ற அறிவியல் அல்லது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வசனங்கள் உங்களுக்கு நினைவில் வந்தால் மறக்காமல் பின்னூட்டத்தில் கூறவும். இந்த பதிவுக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து, இப்பதிவையும் இன்னும் சில திரைக்காவியங்களையும் நாசாவுக்கு பரிந்துரைக்கலாம் என எண்ணுகிறேன், தமிழ்மண்ணின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப்பிடித்திட, அனைவரும் வாரீர், ஆதரவு தாரீர்.

நன்றி
சங்கர்

படங்கள் நன்றி : galatta.com, ngm.nationalgeographic.com

மேல் விவரங்களுக்கு இங்கு செல்லவும்,

http://ngm.nationalgeographic.com/big-idea/01/shading-earth
http://www.theozonehole.com/ozoneholehistory.htm
http://ozonewatch.gsfc.nasa.gov/

Thursday, November 12, 2009

சென்னை மழையும் பின்நவீனத்துவமும்

வெற்றி, வெற்றி, வரலாறு காணாத வெற்றி, போன பதிவுக்குக் கிடைத்த ஓட்டுகளைதாங்க சொல்றேன், தமிழர்கள் அறிவியல் பார்வை கொண்ட அறிவுபூர்வமான ஆராய்ச்சிகளை எப்போதும் வரவேற்பார்கள் என்பதற்கு இது இன்னுமொரு அத்தாட்சி. இந்த மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், அப்பதிவின் கடைசி பத்தியில் சொன்ன சொல்லை காப்பாற்றவும் வேண்டி இந்த பதிவு.


முதலில் பின்நவீனத்துவம் என்பதை சுருக்கமாக சொல்ல முயற்சி செய்கிறேன், இவ்வளவு சிக்கலான விஷயத்தை எப்படி சுருக்கமாய் சொல்வது என்ற மலைப்பு தோன்றினாலும், அவ்வளவு பெரிய ராமாயணத்தையே "விட்டான் ராமன், கெட்டான் ராவணன்" என்று ஒரு வரியில் கூறிய சொல்லின் செல்வர்கள் பிறந்த மண்ணில் தான் நானும் வாழ்கிறேன் என்ற எண்ணம் தந்த தைரியத்தில், யோசித்துக்கொண்டிருந்தபோது காணக்கிடைத்தது, எங்கள் நாயகன், நடிப்பின் பரங்கி எஸ்ஜே சூர்யா (குறிப்பு 1: இமயமலையை இமயம் என்று சொல்லலாம் என்றால், பரங்கிமலையை பரங்கி என்று சொல்வதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன், ஏதோ விரலுக்கேற்ற வீக்கம்; குறிப்பு 2: நன்றாக கவனிக்கவும், பீரங்கி இல்லை பரங்கி, அப்புறம் அவர் அதற்கு வேறு அர்த்தம் சொல்வார்; குறிப்பு 3: பரங்கிமலை ஜோதியில் வெளியிடும் தரமுடைய படங்களை எடுத்தவர் என்பதால் இந்த பட்டத்தை வழங்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்; இன்னுமொரு குறிப்பு: ஜோதி தியேட்டர் இப்போது உள்கட்டமைப்பு சிறப்பாக மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்) நடித்த அ.ஆ. படத்தின் ஒரு காட்சி, "ஒரு விஷயம் இருக்கு ஆனா இல்லை, இல்லை ஆனா இருக்கு" என்று அவர் பேசிய ஒரு வசனம் தான் என்னை நிமிர்ந்து அமர வைத்தது. இதை விட எளிதாய், சிறிதாய், தெளிவாய், சொல்வதற்கு, பின்நவீனத்தில் எங்கள் ஆசான் (விஜயகாந்த படம் இல்லை) சாருவால் கூட முடியாதே என்று மீண்டும் மனம் சோர்ந்தது. இருந்தாலும் 'ஸீரோ டிகிரியை' ஒரே இரவில் நூற்றிநாற்பது பக்கம் படித்ததை நினைவு கூர்ந்து, மனதை தேற்றிக்கொண்டு, நீங்கள் தந்த, தரப்போகும் ஆதரவின் தைரியத்தில் எழுத துவங்கிவிட்டேன்.




பின்நவீனத்துவம் என்றவுடன் முதலில் சொல்லப்படும் வார்த்தை கட்டுடைத்தல். அதாவது நீங்கள் பார்க்கும் விஷயத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அக்குவேறு ஆணிவேராய் பிரித்து மேய்வது, அதில் ஒரு புது அர்த்தம் காண்பது. தினம் தினம் தாம்பரம் முதல் தரமணி வரை பயணிக்கும் நான், போனவாரம் வரை நம்பிக்கொண்டிருந்தேன், அய்யாக்களும் அன்னைகளும் விமானம் ஏற வந்து போகும் வழி என்பதால் அழகாய் பராமரிக்கபடுகிறது இந்தச்சாலை என்று, அனைத்தையும் புரட்டிப்போட்டது இந்தவார மழை, பார்க்க பளபளவென்றிருந்தாலும், அனைத்தும் அவ்வப்போது செய்யப்படும் ஒட்டுவேலைகளின் ஜாலமே என புரியவைத்தது, என் எண்ணத்தை கட்டுடைத்தது மட்டுமல்லாமல் இதற்குமேல் உடைத்தால் மணல் தான் மிஞ்சும் என்று எண்ணுமளவு ஜல்லி ஜல்லியாய் பிரித்துபோட்டது மாமழை. இதற்கு
மேல் கட்டுடைத்தல் தேவையா??




வெறும் தரைவழி போக்குவரத்திற்கான ஊடகமாகவே பார்க்கப்பட்டு வந்த சாலைகளை, நீர்வழித்தடமாகவும் தோன்றவைத்த பெருமை இந்த மழையையே சாரும், மேலும், ஏரியாய் இருந்த இடங்களை தூர்த்துதான் இந்த சாலை அமைக்கப்பட்டது என்பதையும், இன்னும் சில ஆண்டுகளில் இந்த இடங்களெல்லாம் கடலின் ஒரு பாகமாய் மாறக்கூடும் என்பதையும் ஒருங்கே உணர்த்தி கடந்த காலத்தையும் எதிகாலத்தையும் ஒன்றாய் காட்சிப்படுத்திய இந்தப் பருவமழை கண்டிப்பாய் ஒரு பின்நவீனக்காட்சிதான்.



இப்போதாவது புரிந்ததா கொட்டும் மழையென்பது இயற்கை எழுதும் பின்நவீன கவிதை என்று? எந்த ஒரு விஷயத்தையும் இப்படி பின்நவீனநோக்கில் பார்க்கலாம் என்பதை இன்னும் புரிந்துகொள்ள முடியாதவர்கள், பின்னூட்டத்தில் குறிப்பிட்டால், பின்நவீன பார்வைக் குறைபாட்டை நீக்கும் சிறப்பு கண்கண்ணாடி சலுகை விலையில் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மழை நின்றுவிட்டதாலும் நிதிப்பற்றாகுறையாலும் முந்தய பதிவில் குறிப்பிட்ட "மழையும் பள்ளி விடுமுறையும்" என்னும் ஆராய்ச்சி அடுத்த மழை வரும்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த வருத்ததோடு தெரிவித்துக்கொள்கிறோம்.


படங்கள் நன்றி: ஜாக்கி சேகர், cinesouth.com, techshout.com, என் N-70

நன்றி
சங்கர்


Monday, November 9, 2009

கொட்டும் மழை - என்ன காரணம் - ஆராய்ச்சி முடிவுகள்

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து, கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது, ஒரு தொலைக்காட்சி சானலில், எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, மக்கள் நீரில் தத்தளிக்கிறார்கள், அரசும் அதிகாரிகளும் எட்டியே பார்க்கவில்லை, மின்சாரம் தாக்கியும் வீடு இடிந்து விழுந்தும் இதுவரை பலர் இறந்து விட்டனர், இன்னும் பல நூறு பேர் சாகக் கிடக்கிறார்கள், மீட்பு படை வாகனங்களின் சக்கரங்களில் காற்று இல்லை, பன்றி காய்ச்சல் வந்துகொண்டே இருக்கிறது, மற்றொரு சானலிலோ, மக்கள் பத்திரமாக இருக்கிறார்கள், அரசு இயந்திரம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது (ஒரு சந்தேகம், மழையில் நனைந்து துருப்பிடித்துவிடாதா?), அமைச்சர்களே கைப்பட உணவு பொட்டலங்கள் கொடுக்கிறார்கள், அதிகாரிகளோ ஒருபடி மேலே போய் அவரவர் வீட்டிலிருந்தே கைப்பட சமைத்து கொண்டுவந்து வினியோகிக்கிறார்கள், மழை பெய்ய துவங்கிய உடனேயே மின்சாரம் நிறுத்தப்பட்டு விட்டது (அதற்கு முன் மட்டும் என்ன வாழ்ந்தது என்று கேட்ககூடாது)





இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், சமீபகாலமாய் தமிழகத்தில் பெய்யும் மழைக்கும் வானிலை மையத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது, அதாவது 'ரமணன் தொலைக்கட்சியில் வந்து இன்னும் 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என பேட்டியளித்தால் மறுநாள் வெயில் கொளுத்தும், புயல் திசை மாறிவிட்டது, மழை குறையும் என்றால், வீட்டை விட்டு கிளம்ப முடியாத அளவு மழை கொட்டும்' , ஆனால் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ரமணன் சொல்வது அப்படியே பலிக்கிறது, இந்த திடீர் மாற்றம் ஆர்வத்தை கிளப்பிவிட்டதால், இதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணம் குறித்து நமது கம்பேனி சார்பில் ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.




இந்த ஆராய்ச்சியின் முடிவில் ஒரு புதிய உண்மை கண்டறியப்பட்டுள்ளது, அதாவது ரமணன் முழுக்கை சட்டை அணிந்து பேட்டி அளித்தால் மேலே சொன்ன நம்பிக்கை நிஜமாகிறதென்றும், அவர் அரைக்கை சட்டையோ, டீ-ஷர்டோ அணிந்து காட்சியளித்தால், அவர் சொன்னபடி நடக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட ஆவணங்களும் இறுதி அறிக்கையும் பெற விரும்புவோர், ஓட்டு போட்டு, பின்னூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கலாம்

இந்த கட்டுரைக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து, 'மழைக்கும் பள்ளி விடுமுறைக்கும் உள்ள தொடர்பு' மற்றும் 'சென்னை மழை ஒரு பின் நவீனத்துவ பார்வை' ஆகிய ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்படும் என்பதை கம்பேனி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்