இரண்டு நாட்களாய், வடகிழக்கு பருவமழை போலவே, வருவதும் போவதுமாய் போக்கு காட்டிக்கொண்டிருந்த காய்ச்சல் முழுவீச்சில் தொடங்கியதாலும், அலுவலகத்தில் ஏசி அதிகமாயிருந்த காரணத்தாலும் சீக்கு வந்த கோழிபோல் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு ரயிலில் வீடுதிரும்பிக்கொண்டிருந்தேன். முன்னொருமுறை இதுபோன்றதொரு சூழலில் இதேபோல் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு வந்தபோது, ஒரு பெண்ணிடம் கொண்ட மோகத்தால் இறங்க வேண்டிய நிலையத்தை தவறவிட்டு அடுத்ததில் இறங்கி, அதற்குப்பின் வேருவண்டியும் இல்லாத காரணத்தால் ஐந்து கிமீ நடந்த அனுபவம் இருப்பதால், தூங்க விடாத இரைச்சலாக இருக்கட்டுமென பண்பலையை ஆன் செய்து handfreeயை காதில் வைத்தேன்.அலைவரிசை மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருந்தபோது காதில் விழுந்தது ஒரு முத்து. இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவையென சுஜாதா விருது கொடுத்திருக்கக் கூடிய அந்த ரத்தினம் இதோ.

"நீங்கள் அடுத்து கேட்கப்போவது இளையதளபதி விஜய் நடித்த வில்லு என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்திலிருந்து ஓர் அழகான, இனிமையான பாடல்"
இங்கே துவங்குகிறது உங்களுக்கான சவால், மேலே இருக்கும் வரியில் அடிக்கோடிடப்பட்டிருக்கும் எந்த வார்த்தை அதிகபட்ச நகைச்சுவை உணர்வைக் கொண்டிருக்கிறது? எந்த வார்த்தை இந்த வாக்கியத்தை உலகத்தரத்திற்கு உயர்த்துகிறது? உங்கள் இலக்கிய திறனாய்வை பின்னூட்டத்தில் சமர்ப்பிக்கலாம். மிகச்சிறந்த ஆய்வுக்கட்டுரைகளுக்கு முதல் பரிசாக, வெளிவர இருக்கும் வேட்டைக்காரன் திரைப்படத்தின், முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் ஒன்று வழங்கப்படும். அந்தக் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் கம்பெனி சார்பில் புக் செய்யப்படும் என்பதையும் உங்களுக்கு ஒரே ஒரு டிக்கெட்தான் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் (தற்கொலை செய்துகொள்ள தனியாய்தான் செல்ல வேண்டும்). இரண்டாம் பரிசாக வில்லு மற்றும் குருவி திரைப்படங்கள் அடங்கிய DVD வழங்கப்படும். மூன்றாம் பரிசாக என்ன கொடுக்கலாம் என்பதையும் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்.
இந்த ஒற்றைவரி தந்த உற்சாகத்தாலும், புதியதொரு இலக்கிய படைப்பை உங்களுக்கு வழங்க ஒரு வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தாலும், கொதிக்கும் உடம்பையும் மறந்து சைக்கிளை உருட்டியபடி ஸ்டேஷனிலிருந்து வீடுவந்து கொண்டிருந்தபோது, Z போல் வளைத்து வளைத்து ஓட்டிவந்த ஒரு புண்ணியவான் வண்டியை நேரே என் சைக்கிளில் விட்டார், அவர் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் T-Shirt உம், கையில் கட்டியிருந்த கைக்குட்டையும் பார்த்தபோது, அவர் விஜய் ரசிகராயிருக்க கூடிய சாத்தியங்கள் மிக அதிகமென தோன்றியது. யோசனை செய்தபோதே வண்டியில் வந்து மோதுபவர்கள், வீட்டுக்கு ஆட்டோ அனுப்பினால் என்ன செய்வது என்ற அச்சம் இருக்கும் போதிலும், நீங்கள் தரப்போகும் ஆதரவின் தைரியத்தில்இப்பதிவை இடுகிறேன்.
டிஸ்கி:
இப்பதிவை படிக்கும் ரசிகர்கள் யாரும் கோபப்படவேண்டாமென்றும், அசல் மற்றும் சிங்கம் திரைப்படங்கள் வெளிவரும்போதும் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.










