
முதலில் பின்நவீனத்துவம் என்பதை சுருக்கமாக சொல்ல முயற்சி செய்கிறேன், இவ்வளவு சிக்கலான விஷயத்தை எப்படி சுருக்கமாய் சொல்வது என்ற மலைப்பு தோன்றினாலும், அவ்வளவு பெரிய ராமாயணத்தையே "விட்டான் ராமன், கெட்டான் ராவணன்" என்று ஒரு வரியில் கூறிய சொல்லின் செல்வர்கள் பிறந்த மண்ணில் தான் நானும் வாழ்கிறேன் என்ற எண்ணம் தந்த தைரியத்தில், யோசித்துக்கொண்டிருந்தபோது காணக்கிடைத்தது, எங்கள் நாயகன், நடிப்பின் பரங்கி எஸ்ஜே சூர்யா (குறிப்பு 1: இமயமலையை இமயம் என்று சொல்லலாம் என்றால், பரங்கிமலையை பரங்கி என்று சொல்வதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன், ஏதோ விரலுக்கேற்ற வீக்கம்; குறிப்பு 2: நன்றாக கவனிக்கவும், பீரங்கி இல்லை பரங்கி, அப்புறம் அவர் அதற்கு வேறு அர்த்தம் சொல்வார்; குறிப்பு 3: பரங்கிமலை ஜோதியில் வெளியிடும் தரமுடைய படங்களை எடுத்தவர் என்பதால் இந்த பட்டத்தை வழங்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்; இன்னுமொரு குறிப்பு: ஜோதி தியேட்டர் இப்போது உள்கட்டமைப்பு சிறப்பாக மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்) நடித்த அ.ஆ. படத்தின் ஒரு காட்சி, "ஒரு விஷயம் இருக்கு ஆனா இல்லை, இல்லை ஆனா இருக்கு" என்று அவர் பேசிய ஒரு வசனம் தான் என்னை நிமிர்ந்து அமர வைத்தது. இதை விட எளிதாய், சிறிதாய், தெளிவாய், சொல்வதற்கு, பின்நவீனத்தில் எங்கள் ஆசான் (விஜயகாந்த படம் இல்லை) சாருவால் கூட முடியாதே என்று மீண்டும் மனம் சோர்ந்தது. இருந்தாலும் 'ஸீரோ டிகிரியை' ஒரே இரவில் நூற்றிநாற்பது பக்கம் படித்ததை நினைவு கூர்ந்து, மனதை தேற்றிக்கொண்டு, நீங்கள் தந்த, தரப்போகும் ஆதரவின் தைரியத்தில் எழுத துவங்கிவிட்டேன்.

பின்நவீனத்துவம் என்றவுடன் முதலில் சொல்லப்படும் வார்த்தை கட்டுடைத்தல். அதாவது நீங்கள் பார்க்கும் விஷயத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அக்குவேறு ஆணிவேராய் பிரித்து மேய்வது, அதில் ஒரு புது அர்த்தம் காண்பது. தினம் தினம் தாம்பரம் முதல் தரமணி வரை பயணிக்கும் நான், போனவாரம் வரை நம்பிக்கொண்டிருந்தேன், அய்யாக்களும் அன்னைகளும் விமானம் ஏற வந்து போகும் வழி என்பதால் அழகாய் பராமரிக்கபடுகிறது இந்தச்சாலை என்று, அனைத்தையும் புரட்டிப்போட்டது இந்தவார மழை, பார்க்க பளபளவென்றிருந்தாலும், அனைத்தும் அவ்வப்போது செய்யப்படும் ஒட்டுவேலைகளின் ஜாலமே என புரியவைத்தது, என் எண்ணத்தை கட்டுடைத்தது மட்டுமல்லாமல் இதற்குமேல் உடைத்தால் மணல் தான் மிஞ்சும் என்று எண்ணுமளவு ஜல்லி ஜல்லியாய் பிரித்துபோட்டது மாமழை. இதற்கு
வெறும் தரைவழி போக்குவரத்திற்கான ஊடகமாகவே பார்க்கப்பட்டு வந்த சாலைகளை, நீர்வழித்தடமாகவும் தோன்றவைத்த பெருமை இந்த மழையையே சாரும், மேலும், ஏரியாய் இருந்த இடங்களை தூர்த்துதான் இந்த சாலை அமைக்கப்பட்டது என்பதையும், இன்னும் சில ஆண்டுகளில் இந்த இடங்களெல்லாம் கடலின் ஒரு பாகமாய் மாறக்கூடும் என்பதையும் ஒருங்கே உணர்த்தி கடந்த காலத்தையும் எதிகாலத்தையும் ஒன்றாய் காட்சிப்படுத்திய இந்தப் பருவமழை கண்டிப்பாய் ஒரு பின்நவீனக்காட்சிதான்.


இப்போதாவது புரிந்ததா கொட்டும் மழையென்பது இயற்கை எழுதும் பின்நவீன கவிதை என்று? எந்த ஒரு விஷயத்தையும் இப்படி பின்நவீனநோக்கில் பார்க்கலாம் என்பதை இன்னும் புரிந்துகொள்ள முடியாதவர்கள், பின்னூட்டத்தில் குறிப்பிட்டால், பின்நவீன பார்வைக் குறைபாட்டை நீக்கும் சிறப்பு கண்கண்ணாடி சலுகை விலையில் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மழை நின்றுவிட்டதாலும் நிதிப்பற்றாகுறையாலும் முந்தய பதிவில் குறிப்பிட்ட "மழையும் பள்ளி விடுமுறையும்" என்னும் ஆராய்ச்சி அடுத்த மழை வரும்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த வருத்ததோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
படங்கள் நன்றி: ஜாக்கி சேகர், cinesouth.com, techshout.com, என் N-70
நன்றி
சங்கர்
