
நண்பர்களே வணக்கம், இந்த பதிவு என்னை போன்று மூக்குகண்ணாடி (spectacles) மற்றும் காண்டாக்ட் லென்ஸ் (contact lens) அனிந்து சிரமப்படும் அன்பர்களுக்காக. நான் கடந்த 14 வருடங்களாக இந்த கண்ணாடிய போட்டுட்டு பட்ட பாடு சொல்லி மாளாது, அப்பப்பா நிம்மதியா ஒரு கூலர்ஸ் போட்டுட்டு சீன் போட முடியல நீச்சல் அடிக்க முடியல (நமக்கு தான் கண்ணாடிய போடலைனா கண்ணு ஒரு எளவும் தெரியாதே). இப்போ இரண்டு வாரம் தான் ஒரு சுதந்திர பறவையை போல் இருக்கிறேன்.
சரி விஷயத்துக்கு வருவோம், நான் இரண்டு வாரத்துக்கு முன்பு தான் இந்த அதிநவீன லேசிக் லேசர் சிகிச்சையை மேற்கொண்டேன். அப்பாடா இந்த மருத்துவ உலகம் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்று எண்ணி வாயடைந்து நிற்கிறேன். என்னோட இத்தனை வருட தொல்லையை வெறும் 8 நிமிடங்களுக்குள் மறைய செய்துவிட்டது.
பதினெட்டு வயது பூர்த்தியாகிய பிறகு தான் ஒருவர் இந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும், ஏனென்றால் அதற்கு பிறகு தான் நம் கண்ணின் அமைப்பு மாறாது. நீங்கள் Contact Lens உபயோகிப்பவரானால் மருத்துவரை அணுகுவதற்கு குறைந்தது ஒரு 15 நாட்கள் முன்பே அதை தவிர்க்க வேண்டும். பின் பல்வேறு சோதனைகள் செய்து நீங்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ள தகுதியானவரா என்பதை மருத்துவர் முடிவு செய்வார். இதற்கு நீங்கள் குறைந்தது ஒரு ஐந்து மணி நேரம் ஒதுக்க வேண்டும்.
பின் மருத்துவர் உங்களுக்கு எப்படி இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்பதை மிக தெளிவாக விளக்குவார், கடுகளவேனும் நீங்கள் பயம் கொள்ள வேண்டாம். மேலும் இதில் பல வகைகள் உண்டு, பொதுவாக Lasik சிகிச்சை தான் பல மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுகிறது, இதற்க்கு காரணம் அதற்கு ஆகும் செலவு தான் (சற்று அதிகம் தான்). இந்த சிகிச்சை மேற்கொள்ள நான் விசாரித்ததில் Agarwal 40,000/- Sankara Nethralaya 35,000/- Reya Laser Vision Centre 38,000/- மற்றும் Lasik Laser Associates 30,000/- இப்படியாக உள்ளது. இந்த நேரத்தில் நான் ஒன்றை குறிப்பிட வேண்டும், பாதுகாப்பு துறையில் இந்த முறை சிகிச்சை செய்துகொள்பவர்களை அனுமதிப்பது கிடையாது. ஆனால் இப்பொழுது புதிதாக வந்துள்ள Intralasik முறையில் (Microkeratome என்ற நுண்ணிய கத்தி உபயோகப்படுத்தாத முறை) நீங்கள் சிகிச்சை செய்து கொண்டால் முதன் முறையாக அமெரிக்க ராணுவம் அனுமதி அளித்துள்ளது.
நான் மேற்கொண்ட Lasik சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது என்பதை விளக்க கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
ஒரு மிக நவீன மிக சிறிய பிளேடு (Microkerotene) கொண்டு நம் கண்ணின் முன்பு உள்ள பகுதியில் (cornea) ஒரு சிறிய பகுதியை (few microns) திறந்து (பயம் வேண்டாம்) அதை சற்று நீக்கிய பின்பு சிறிது விநாடிகள் லேசர் கற்றைகள் நம் கண்ணில் செலுத்தப்படுகிறது. பின் அந்த பகுதியை திறந்த மாதிரியே மூடி விடுகிறார்கள். அவ்வளவு தான் மேட்டர் ஓவர். ஒரு கண்ணுக்கு இதை செய்ய ஆனா நேரம் நான்கு நிமிடங்களுக்கும் சற்று குறைவு தான். வலி என்பது ஒன்றும் இல்லை. சிகிச்சை மேற்கொண்ட சற்று நிமிடங்களிலே பார்வையில் நன்றாக வித்தியாசம் உள்ளது.
அன்று ஒரு நாள் மட்டும் கண்னை திறக்காமல் மூடி இருப்பது நல்லது. சிலருக்கு கண் எரிச்சல், நீர் வடிதல் போன்ற தொல்லைகள் அன்று ஒரு நாள் மாட்டும் ஏற்பட வாய்ப்பு உண்டு ஆனால் எனக்கு ஒன்றும் தொந்தரவு இல்லை. மருநாள் முதல் பலுவற்ற வேலைகள் செய்யலாம். சொட்டு மருந்து விட வேண்டும். இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் வெயிலில் செல்லும்பொழுது கருப்பு கண்ணாடி அணிவது நல்லது, அது கூட பரவாயில்லை ஆனால் மொத்தம் இரண்டு வாரங்களுக்கு இரவில் என்னால் வாகனம் ஓட்டிசெல்ல முடியவில்லை அவ்வளவு Glare. ஆனால் படிப்படியாக நல்ல முன்னேற்றம் இன்று ஒரு பிரச்னையும் இல்லை. கணினி உபயோகம் மற்றும் சற்று சிரமமாக உள்ளது, தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கு மேல் உபயோகப்படுத்த இயலவில்லை.
முடிவாக நான் சொல்லுவது என்னவென்றால் வருடம் ஒரு முறை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று பிறகு கண்ணாடி மாத்தி, இந்த வேலையெல்லாம் செய்து சிறிது சிறிதாக செலவு செய்வதைவிட மொத்தமாக ஒரே முறை இந்த சிகிச்சை மேற்கொண்டு நிம்மதியாக இருங்கள். நான் சென்ற இந்த நாலு இடத்திலும் நான் பார்த்த வரையில் ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது ஐந்து சிகிச்சை செய்கின்றனர் தினமும். எந்த ஒரு வலியும் இல்லாம நோகாத நொங்கு உரிக்கிற வேல.




